பெண்ணுக்கும் பேய்க்கும் இடையேயான சக்களத்தி சண்டை தான் 'சண்டிமுனி' படத்தின் கதைக் கரு என்று கலகலப்பூட்டு கிறார் இயக்குநர் மில்கா எஸ்.செல்வகுமார். நட்டி நட்ராஜ், மனிஷா யாதவ் இருவரும் ஜோடி சேர்ந்துள்ள இப்படத்தில் யோகி பாபு நகைச் சுவையில் அசத்துவாராம். பரோட்டா சூரி, யோகி பாபு இருவரும் ஒரு காலத்தில் செல்வ குமாருடன் ஒரே அறையில் தங்கி யவர்களாம். சூரியுடன் சேர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார் செல்வகுமார்.
யார் இந்த 'சண்டிமுனி'?
"இது பழிவாங்கும் பேய்க் கதை அல்ல. அதேசமயம் காட்சி அமைப்பு விறுவிறுப்பாக இருக்கும். படம் முழுவதும் நகைச்சுவைக்கு குறைவிருக்காது. "படத்தின் இறுதிக்காட்சியில் அசத்தலான ஒரு திருப்பத்தை எதிர்பார்க்கலாம். நகைச்சுவை, குடும்ப உணர்வுகள் என எல்லா அம்சங்களையும் கலந்து திரைக் கதை அமைத்துள்ளோம். "பொறியியலாளராக நடிக்கும் நட்டி நட்ராஜுக்கு மனிஷா யாதவ் ஜோடி. இவருக்கு இரட்டை வேடம். ஆசிரியையாகவும் ஜமீன் குடும்பத்துப் பெண்ணாகவும் அழகாக நடித்துள்ளார். "மனிஷாவுக்கு முன் வரலட் சுமியை நடிக்கவைப்பதே எங்க ளுடைய திட்டமாக இருந்தது. அவர் வேறு சில படங்களில் நடித்து வருவதால் எங்களுக்கு கால்ஷீட் ஒதுக்க முடியவில்லை.
"அந்த சமயத்தில்தான் 'ஒரு குப்பைக்கதை' படம் பார்த்தேன். அதில் மனிஷாவின் நடிப்பு சிறப் பாக இருந்தது. இதையடுத்து பெங்களூருவுக்குச் சென்று அவரை நேரில் சந்தித்து கதை சொன்னேன். "சிரித்தபடியே முழு கதையையும் கேட்டவர், உடனே நடிக்க சம்மதித்தார். நாங்கள் எதிர்பார்த்ததைவிட அவரது நடிப்பு சிறப்பாக உள்ளது," என்கி றார் இயக்குநர் செல்வகுமார். நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் நடிக்க நட்ராஜ் எப்படி சம்மதித்தார் என்று கேட் டால், சசிகுமாரைத் தான் நாயக னாக நடிக்க வைக்க திட்டமிட்டி ருந்ததாக அடுத்த குண்டை வீசு கிறார் இந்த அறிமுக இயக்குநர். சசிகுமாராலும் கால்ஷீட் ஒதுக்க முடியாத நிலையில், நட்ராஜை அணுகினார்களாம்.
"இந்தி திரையுலகில் நட்ராஜ் மிக முக்கியமான ஒளிப்பதிவாளர். அங்குள்ள முன்னணி நாயகர்க ளுடன் இணைந்து பணியாற்றி யவர். நானோ அறிமுக இயக்குநர். எனவே நட்ராஜின் தலையீடு அதிகமாக இருக்குமோ எனும் தயக்கம் எனக்கிருந்தது. ஆனால் அவரோ எதிலும் தலையிடாமல் முழுமையாக ஒத்துழைத் தார். அவரைப் போல் எளிமையான, கண்ணியமான திரைபிரபலத்தை காணமுடியாது," என்று பாராட்டுப் பத்திரம் வாசிக்கிறார் செல்வகுமார்.
நட்ராஜின் கதாபாத்திரத்தை பெண்களுக்குப் பிடிக்கும் வகையில் சித்திரித்துள்ளாராம். நெருங்கிய நண்பர் என்பதால் செல்வகுமார் கேட்டதைவிட அதிக நாட்களுக்கு கால்ஷீட் ஒதுக்கி உள்ளார் யோகி பாபு. "தொடக்கத்தில் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளில் தலைகாட்டி வந்தார் யோகி. முதல் சந்திப் பிலேயே இருவரும் நெருங்கிய நண்பர்களாகி விட்டோம். சினிமா வில் உயர்ந்த நிலைக்குச் சென்று விட்டபோதிலும் பழைய விஷயங் களை அவர் இன்னும் மறக்க வில்லை.
"இந்தப் படத்தில் மனிஷாவின் தாய்மாமா கதாபாத்திரத்தில் தோன்றி வயிறு குலுங்க வைப்பார். அது மட்டுமல்ல, ஒரு பாடலையும் பாடியுள்ளார். அந்தப் பாடல் விரைவில் வெளியாகும். "தவிர தனது குரலையும் மாற்றிப் பேசி அசத்தி உள்ளார். மொத்தத்தில் யோகிபாபு படம் முழுவதும் வருவது எங்களுக்குப் பலம் சேர்த்துள்ளது என்பதே உண்மை," என்கிறார் இயக்குநர் செல்வகுமார்.

