அஜித் நடிப்பில் பெரும் எதிர் பார்ப்புக்கு மத்தியில் 'விஸ்வாசம்' படம் நேற்று வெளியானது. சிவா இயக்கத்தில் அஜித்துடன் நயன்தாரா, தம்பி ராமையா, விவேக், யோகிபாபு ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப் படம் நேற்று நள்ளிரவு சில திரையரங்குகளில் வெளியானது. கண்விழித்துப் பார்த்த ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். கோயம்பேடு ரோகிணி திரையரங்கம் உள்ளிட்ட சில திரையரங்குகளில் ரஜினி ரசிகர்களுக்கும் அஜித் ரசிகர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. காவல்துறை உதவியுடன் அவர்கள் கட்டுப் படுத்தப்பட்டனர்.
வேலூர் ஓல்டு டவுனில் உள்ள அலங்கார் திரையரங்கில் ரசிகர்கள் சிலர் நாக்கில் சூடம் ஏற்றி அஜித் படம் வெளியானதைக் கொண்டாடியதோடு வெற்றி பெற வழிபாடும் செய்தனர். அதே நேரத்தில் ரஜினியின் 'பேட்ட' படத்தை சீண்டுவதைப் போல், கட் அவுட் பதாகைகளில் வசனங்களையும் ரசிகர்கள் அச்சிட்டிருந்தனர். வேலூர் ஓல்டு டவுனைச் சேர்ந்தவர் பிரசாத் (வயது 20). இவரது உறவினர் ரமேஷ் (30) இருவரும் அஜித் ரசிகர்கள். வேலூர் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள அலங்கார் திரையரங்கத்திற்கு ரசிகர்களுக்கான சிறப்புக் காட்சியில் படம் பார்க்கச் சென்றனர். அதிகாலை 4 மணிக்குக் காட்சிக்கு ரசிகர்கள் முண்டியடித்தபடி திரையரங்கிற்குள் நுழைந்தபோது, பிரசாத்துக்கும் மற்றொரு தரப்பில் வந்த அஜித் ரசிகர்களுக்கும் இருக்கை பிடிப்பதில் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அந்தக் கும்பல் கத்தியால் பிரசாத்தை வயிற்றில் குத்தியது. தலை, தோள்பட்டை ஆகிய இடங்களிலும் வெட்டினர். இதனைத் தடுக்க வந்த ரமேஷையும் தலையில் கத்தியால் தாக்கினர்