ஒரு படம் தோல்வி அடைந்தால் தயாரிப்பாளருக்கு ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட கதா நாயகர்கள் சம்பளத்தில் ஒரு பகுதியை விட்டுக்கொடுக்க வேண்டும் எனும் கோரிக்கைகள் எழுவது சகஜம். பொதுவாக நாயகிகளுக்கு இம்மாதிரியான சங்கடங்கள் எழுவதில்லை. இந்நிலையில் தாம் நடித்த படம் தோல்வி அடைந்ததால் தனது சம்பளத்தின் குறிப்பிட்ட ஒரு தொகையை விட்டுக் கொடுத்துள்ளார் சாய் பல்லவி. இவரும் சர்வானந்தும் இணைந்து நடித்த 'படி படி லேச்சு மனசு' என்ற தெலுங்குப் படம் அண்மையில் வெளியானது. படத்தின் வசூல் எதிர்பார்த்தபடி அமையவில்லையாம்.
இதனால் தயாரிப்பாளர், விநியோகிப்பாளர்கள் என பலருக்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சாய்பல்லவிக்கு பேசிய சம்பளத்தில் ரூ.40 லட்சத்தை படம் வெளியான பிறகு தருவதாக வாக்குறுதி அளித்திருந்தாராம் தயாரிப்பாளர். படம் தோல்வி அடைந்தபோதிலும் பணத்துடன் வந்திருக்கிறார். ஆனால், அவரின் நிலை அறிந்த சாய்பல்லவி பணத்தை வாங்க மறுத்துவிட்டதாகத் தகவல். அவரது இந்தச் செயலைத் திரையுலகத்தினர் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.