கடந்த பல நாட்களாக ரசிகர்கள் மற்றும் சக திரைக்கலைஞர்களின் அன்புத் தொல்லையை எதிர் கொண்டதாகவும், தற்போது அதிலிருந்து மீண்டுவிட்டதாகவும் சொல்கிறார் இளம் நாயகி அனுபமா பரமேஸ்வரன். இவர் 'கொடி' உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர். தமிழில் அதிக வாய்ப்பு இல்லாவிட்டாலும் தெலுங்கிலும் மலையாளத்திலும் தொடர்ந்து நடித்து வருகிறார். கவர்ச்சிக்கும் இவருக்கும் அறவே ஒத்துவராது. இதன் காரணமாகவே இவரைத் தேடி அதிக வாய்ப்புகள் வருவதில்லை. இதனால் ரசிகர்களிடம் வர வேற்பு கிடைத்தாலும் முன்னணி இயக்குநர்கள் அனுபமாவைக் கண்டுகொள்வதில்லை.
அனைவரிடமும் சகஜமாகப் பேசி பழகுபவர் என்பதால் அனுபமாவின் கைபேசி எண்கள் பலருக்கும் தெரிந்திருந்தது. இதனால் ஏராளமான ரசிகர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் இவரைத் தினமும் தொடர்புகொண்டதோடு ஏகப்பட்ட செய்திகளையும் அனுப்பியுள்ளனர். இதனால் ஒரு கட்டத்தில் எரிச்சல் அடைந்தாராம். எனினும் யாரையும் கடிந்துகொள்ள முடியாது என்பதால் வேறு வழியின்றி தனது கைபேசி எண்ணையே மாற்றிவிட்டார். அதன்பிறகுதான் நிம்மதியாக உணர்கிறாராம். தற்போது அன்புத்தொல்லை தரும் அழைப்புகள் அறவே வருவதில்லை என்று உற்சாகத்துடன் சொல்கிறார் அனுபமா.