கோடம்பாக்கத்துப் புது வரவான மேகா ஆகாஷ் இளையர்களின் தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை ரேவதி போன்று துறுதுறுவென பேசும் பட்டாம்பூச்சியாக வலம் வரும் இளம் நாயகி என்று ரசிகர்கள் இவரைப் பாராட்டுகின்றனர். 'பேட்ட' படத்தில் ரஜினியுடன் நடித்த பூரிப்பில் இருப்பவர் அடுத்தடுத்து மூன்று புதுப் படங்களில் ஒப்பந்தமாகி உள்ளாராம். 'ஒருபக்கக் கதை'தான் தமிழில் மேகாவின் முதல் படம். அதன் பிறகு தனுஷுடன் 'எனை நோக்கிப் பாயும் தோட்டா'வில் ஒப்பந்தமானார்.
பிறகு அதர்வாவுடன் 'பூமராங்', சுந்தர் சி.யின் 'வந்தா ராஜாவாத்தான் வருவேன்' ஆகிய படங்களிலும் ஒப்பந்தமானார் மேகா. தவிர, இந்திப் பட வாய்ப்புகளும் தேடி வந்தனவாம். ஆனால், அனைத்தையும் முந்திக்கொண்டு 'பேட்ட' தான் முதலில் வெளியாகி உள்ளது. இவரது தாய், தந்தை இருவருமே திரைத் துறையுடன் தொடர்புள்ளவர்கள் தான். தந்தைக்குத் திரையுலகில் நண்பர்கள் அதிகம். இவரது தாயார் நிறைய விளம்பரப் படங்களின் உருவாக்கத்தில் பங்கு பெற்றவர். ஒளிப்பதிவாளர்கள் மணிகண்டன், திரு, படத்தொகுப்பாளர் ஆண்டனி, இயக்குநர் கவுதம் மேனன் ஆகியோரைச் சிறு வயது முதலே மேகாவுக்கு நன்கு தெரியுமாம்.
"இவர்கள் மட்டுமல்லாமல், மேலும் பலர் என்னை நடிக்கவைக்குமாறு அப்பாவிடம் பல முறை கூறியுள்ளனர். சிலர் சிறுமியாக இருந்த என்னிடமே நேரடியாகக் கேட்டுள்ளனர். அப்போதெல்லாம் பள்ளிப் படிப்பு முடியட்டும் என்றே சொல்லிக் கொண்டிருந்தேன்.

