திரைப்படத் துறையின் ஆக உயரிய விருதுகளில் ஒன்றான 'ஆஸ்கர்' விருதுக்கான நிகழ்ச்சி இவ்வாண்டு சிங்கப்பூரில் ஒளிபரப்பப்படாது. கடந்த நான்கு ஆண்டுகளாக நிகழ்ச்சியை சிங்கப்பூர் ரசிகர்களுக்காக நேரடியாக ஒளிபரப்பி வந்த 'எச்பிஓ' ஒளிவழி, இவ்வாண்டு அதனைச் செய்யப்போவதில்லை என முடிவெடுத்தது.
தனது கம்பிவட தொலைக்காட்சி ஒளிவழிகள் எதுவும் இவ்வாண்டுக்கான ஆஸ்கர் நிகழ்ச்சியை ஒளிபரப்பப்போவதில்லை என்று ஸ்டார்ஹப் டிவியும் சிங்டெல் டிவியும் தெரிவித்தன. இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பப்போவதில்லை என்று மீடியாகார்ப் ஒளிபரப்பு நிறுவனமும் தெரிவித்தது. ஆஸ்கர் விருது நிகழ்ச்சிக்கான ஆர்வம் அண்மைய ஆண்டுகளில் குறைந்து வருகிறது. அமெரிக்கத் திரைத்துறையில் அரசியல் கருத்துகள் அதிகம் திணிக்கப்படுவதாகவும் அதனால் அந்நிகழ்ச்சியின் மீதான மக்களின் ஆர்வம் குறைந்திருப்பதாகவும் அந்நாட்டின் அரசியல் கவனிப்பாளர்கள் சிலர் கருதுகின்றனர்.
கடந்தாண்டின் ஆஸ்கர் நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் பார்த்தவர்களின் எண்ணிக்கை 26.6 மில்லியன். அண்மைய ஆண்டுகளில் இது ஆகக் குறைவான எண்ணிக்கையாக உள்ளது.