கோலிவுட் திரையுலகில் ரஜினி, கமல் படங்கள் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்கள் இரண்டாம் பாகமாக உருவாகி வெளிவந்து கொண்டிருக்கின்றது. அந்த வகையில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த படம் ஒன்றும் விரைவில் இரண்டாம் பாகமாக உருவாக இருப்பதாக செய்திகள் வெளி வந்துள்ளன.
விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குநர் அருண்குமார் இயக்கிய 'சேதுபதி' திரைப்படம் கடந்த 2016ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது. விஜய் சேதுபதியின் கம்பீர காவல்துறை தோற்றம் இந்தப் படத்தின் வெற்றிக் கான காரணங்களில் ஒன்று. இந்த நிலையில் 'சேதுபதி 2' திரைப்படத்தை விரைவில் எடுக்க இருப்பதாக அறிவித்துள்ளனர்.
'சேதுபதி 2' திரைப்படத்தை முதல் பாகத்தைத் தயாரித்த வாசன் மூவீஸ் நிறுவனமே தயாரிக்கவிருப்பதாகவும் அதேபோல் அருண்குமாரே இந்தப் படத்தை இயக்க வுள்ளதாகவும் செய்திகள் கூறப்படுகின்றன.
வாசன் மூவீஸ் நிறுவனம் ஏற்கெனவே விஜய்சேதுபதி நடித்து வரும் 'சிந்துபாத்' மற்றும் 'மாமனிதன்' ஆகிய திரைப்படங்களையும் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 'கடைசி விவசாயி' என்ற படத்தை அதிக விளம்பரம் இல்லாமல் எடுத்து வருகிறார் 'காக்கா முட்டை' மணிகண்டன்.
சினிமாவுக்கே சம்பந்தமில்லாத ஒரு பெரியவர்தான் இப்படத்தின் கதாநாயகன். ஆனாலும் இதுபோன்ற நல்ல படத்தில் தானும் நடிக்கவேண்டும் என்று விரும்பிய விஜய் சேதுபதி, தன்னுடைய ஆசையை இயக்குநரிடம் தெரிவிக்க மகிழ்ந்துபோன மணிகண்டன் உடனே விஜய் சேதுபதிக்குப் பொருத்தமாக கதையை எழுதத் தொடங்கி விட்டார்.
விஜய் சேதுபதியின் காட்சிகளுக்கு பதினைந்து நாட்கள் போதும் என்ற நிலையில் அதற்கான நாட்களை ஒதுக்கிக் கொடுத்து இருக்கிறார் விஜய் சேதுபதி.
படப்பிடிப்பு தேனி பகுதியில் ஒரு மலை உச்சியில் நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் பல கி.மீ தூரம் மலையில் ஏறிச் சென்று நடித்துக் கொடுத்து வருகிறார் விஜய் சேதுபதி. இப்படி மேலும் கீழும் நடந்து நடந்து அதிலேயே ஆறு நாட்கள் காலியாகிவிட்டதாம். அதுபற்றிக் கவலைப்படாமல் தொடர்ந்து நடித்து வருகிறாராம். விஜய் சேதுபதியின் அர்ப்பணிப்பைப் பார்த்து படக்குழுவே வியந்ததாம்.