தடகள போட்டிகளில் பல்வேறு சாதனைகளைப் படைத்த பி.டி.உஷாவின் வாழ்க்கையைத் திரைப்படமாக உருவாக்கும் பணிகளில் இயக்குநர் ரேவதி வர்மா ஈடுபட்டுள்ள நிலையில் அந்த கதாபாத்திரத்தில் கத்ரீனா கைஃப் நடிக்க இருக்கிறார்.
பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருந்த கத்ரீனா கைஃப் அண்மைக்காலமாக அந்த இடத்தைத் தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா, ஆலியா பாட் போன்ற நடிகைகளின் வசம் செல்ல விட்டுவிட்டார்.
மீண்டும் பாலிவுட்டின் முன்னணி நடிகை அந்தஸ்தைப் பிடிக்க போராடி வருகிறார் கத்ரீனா கைஃப். ஆமீர்கானுடன் அவர் நடித்த 'தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான்', ஷாரூக்கானுடன் நடித்த 'ஜீரோ' படங்கள் படுதோல்வி யடைந்துள்ளன.
இந்நிலையில், வரும் ஈகைத் திருநாளில் வெளியாகும் சல்மான் கானின் 'பாரத்' படத்தை பெரிதும் நம்பியுள்ளார். அந்தப் படமும் தன்னை ஏமாற்றினால் என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருந்தார் கத்ரீனா கைஃப்.
இந்நிலையில் இயக்குநர் ரேவதி வர்மா பி.டி.உஷாவின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்கப்போவதாக அறிவித்து இருந்தார்.
அந்தப் படத்தில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நடிக்க உள்ளதாக முதலில் கூறப்பட்டது. பிரியங்கா ஏற்கெனவே குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தைப் பார்த்த பிறகு தன் மனநிலையை மாற்றிக்கொண்டு கத்ரீனாவிடம் தன்னுடைய படத்தில் நடிக்க கேட்டிருக்கிறார் இயக்குநர்.
இது தனக்குக் கிடைத்த வாய்ப்பாக நினைத்து உடனே கத்ரீனா நடிக்க ஒப்புக்கொண்டு விட்டார். தற்போது மற்றவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகைகள் நடித்து நல்ல பெயர் எடுத்து வருவதால் தானும் பி.டி.உஷாவாக நடித்து விட்ட முன்னணி இடத்தை மீண்டும் பிடிக்க முடிவெடுத்து உடற்பயிற்சி செய்வதில் மும்முரமாக இறங்கி இருக்கிறார் கத்ரீனா கைஃப்.

