ரூ.1000 கோடியில் திட்டமிடப்பட்ட 'மகாபாரதம்' படத்தைக் கைவிட்டுவிட்டதாக தயாரிப்பாளர் ரகுராம் ஷெட்டி தெரிவித்துள்ளார்.
பீமனின் பார்வையிலிருந்து மகாபாரத்தை 'ரண்டமூழம்' என்ற தலைப்பில் நாவலாக எழுதியவர் எம்.டி.வாசுதேவன் நாயர். இந்த நாவல் பல்வேறு விருதுகளை வென்றது மட்டுமல்லாமல் பல்வேறு மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டது.
இந்த நாவலை மையமாக வைத்து வி.ஏ.ஸ்ரீகுமார் மேனன் படமாக இயக்க முடிவு செய்தார். இதனைச் சுமார் 1,000 கோடி ரூபாய் பொருட்செலவில் தொழில் அதிபர் ரகுராம் ஷெட்டி தயாரிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதில் நாயகனாக நடிக்க மோகன்லால் ஒப்பந்தமானார். தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு மொழிகளிலிருந்து முன்னணி நடிகர்கள் பலர் நடிக்க பேசப்பட்டிருந்தது.
இந்தியாவில் அதிக பொருட்செலவில் தயாரிக்கப்படும் படம் என்ற சாதனை மட்டுமல்லாது, ஹாலிவுட் படங்களைத் தவிர்த்து அதிக பொருட்செலவில் தயாரிக்கப்படும் படம் என்ற சாதனையையும் நிகழ்த்தியது. இதன் பணிகள் 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இரண்டு பாகங்களில் முதல் பாகம் 2020இல் வெளியாகும் என்றும் அறிவித்தனர்.
தற்போது இப்படம் கைவிடப்பட்டதாக தயாரிப்பாளர் ரகுராம் ஷெட்டி அறிவித்துள்ளார். இதற்கு கதையாசிரியர் எம்.டி.வாசுதேவன் நாயருக்கும் இயக்குநர் வி.ஏ.ஸ்ரீகுமார் மேனனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் படம் நின்றுவிட்டது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், "நான் இன்னும் நல்ல கதாசிரியருக்காகக் காத்திருக்கிறேன். கண்டிப்பாக எடுப்பேன். அதற்கான ஈடுபாடு என்னிடம் உள்ளது. ஓர் உண்மையான இந்தியனாக, நமது வரலாற்றை உலகம் முழுவதும் அனைத்து மொழிகளிலும் எடுத்துச் செல்ல நான் இந்தப் படத்தை எடுக்கிறேன்," என்றும் குறிப்பிட்டுள்ளார் ரகுராம் ஷெளட்டி. படம் கைவிடப்பட்டதைக் கேள்விப்பட்ட மோகன்லால் ரசிகர்களின் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர்.

