விஜய் சேதுபதி, சமந்தா, பஹத் பாசில், மிஸ்கின், பகவதி பெருமாள் ஆகியோர் நடித்து அண்மையில் திரைக்கு வந்த படம் 'சூப்பர் டீலக்ஸ்'. இந்தப் படத்தைத் தியாகராஜன் குமாரராஜா இயக்கி இருந்தார்.
இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. இதில் முன்னணி நடிகர்கள் நடிக்க விரும்பாத வேடத்தில் 'இமேஜ்' பார்க்காமல் விஜய் சேதுபதி நடித்து இருந்த திருநங்கை வேடம் பேசப்பட்டது.
கவர்ச்சி காட்சிகள் அதிகம் இருந்ததாக விமர்சனங்களும் வந்தன. இந்தப் படத்தை பிரபல இந்தி இயக்குநர்கள் அனுராக் காஷ்யப், விக்ரமாதித்யா மோட்வானி உள்பட பலர் பார்த்துப் பாராட்டி இருக்கிறார்கள்.
விஜய் சேதுபதி நடித்திருந்த திருநங்கை வேடத்தில் நடிக்க பாலிவுட் முன்னணி நடிகர்கள் பலரும் விருப்பம் தெரிவித்து இருக்கிறார்கள்.
விஜய் சேதுபதி நடித்த வேடம் பலரையும் கவர்ந்திருப்பதால் தமிழ்ப் படத்தை அப்படியே இந்தியில் மொழி பெயர்த்து வெளியிடவும் பல தயாரிப்பாளர்கள் இயக்குநர் குமார ராஜாவிடம் பேசி வருகின்றனர்.
இந்நிலையில் மதுரையில் கடைத்திறப்பு விழா ஒன்றுக்குச் சென்ற விஜய் சேதுபதியிடம், யார் அரசியலுக்கு வரவேண்டும் என்று கேட்டதற்கு, "யாருக்கு அறிவும், மக்களுக்குச் சேவை செய்யும் மன பக்குவமும் உள்ளதோ அவர்கள் அரசியலுக்கு வரலாம். தேர்தலின் போது பல ஆண்டுகளாக பணம் வாங்கிக் கொண்டு வாக்களிக்கிறார்கள். அது தவறான செயல்.
மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும், வாக்களிப்பது நமது கடமை. வாக்கு போடுவது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பல நடிகர்கள் முன்வந்தனர். அதில் நானும் ஒருவன். தயவுசெய்து பணம் வாங்கிக்கொண்டு வாக்களிக்காதீர்கள்," என்று பதிலளித் தார்.
நீங்கள் அரசியலுக்கு வருவீர் களா என்று கேட்டதற்கு, "அறிவாந்த வர்கள் மட்டும் அரசியலுக்கு வரவேண்டும். என்னிடம் இது குறித்துக் கேட்க வேண்டாம். அணில் சேமியா விளம்பரத்தில் கிடைத்த ஊதியத்தில் நான் எந்தக் கிராமத்தையும் தத்தெடுக்க வில்லை. அது முற்றிலும் தவறான செய்தி.
"சமூக வலைத்தளங்களில் தவறான செய்திகள் மிக விரைவாக பரவுவதைத் தடுத்துப் பாதுகாப்பாக கையாளவேண்டும். சாதி மாற்றி திருமணம் செய்தோர் மகிழ்ந்து வாழும் வாழ்வியலை யாரும் விளம்பரம் செய்யாத நிலையில், 'டிக்டாக்' போன்றவற்றிற்குத் தடை விதிப்பது குறித்து விளக்கம் கூற இயலாது," என்று பேசி அனைவரின் கைத் தட்டலையும் பெற்றார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.
மதுரையில் தேர்தல் நடக்க இருக்கும் நேரத்தில் விஜய் சேதுபதி வாக்கு போடுவது பற்றி பேசியது மக்கள் அனைவரையும் சிந்திக்க வைத்திருக்கிறது.