நடிகை டாப்சி நடுராத்திரியில் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு நட்சத்திர விடுதியில் ரகளை செய்ததாக அவருடைய நண்பரும் இந்தி நடிகருமான விக்கி கவுசல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்போது அவருடன் இருந்த டாப்சி அதை நினைத்து தான் வருந்துவதாகக் கூறினார்.
தமிழில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி தேசிய விருதை பெற்ற திரைப்படம் 'ஆடுகளம்'. இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை டாப்ஸி. மாபெரும் வெற்றியடைந்த இப்படத்தின் மூலம் நடிகை டாப்ஸி தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று பிரபலமடைந்தார். அதனைத் தொடர்ந்து அஜித் நடித்த 'ஆரம்பம்', லாரன்ஸ் நடித்த 'காஞ்சனா' போன்ற வெற்றிப் படங்களில் நடித்து தென்னிந்திய திரையில் பிரபல நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.
மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல்வேறு வேடங்களில் நடித்துள்ள இவரால் முன்னணி நடிகையாக வலம் வர முடியவில்லை என்று 'பாலிவுட்' பக்கம் பறந்தார். அங்கு டாப்ஸிக்கு பெரும் வரவேற்பு கிடைத்ததால் இந்தியில் முன்னணி நடிகையானார்.
இந்த நிலையில் அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் டாப்ஸி, இந்தி நடிகர் விக்கி கவுசல் பங்கேற்றனர். அப்போது டாப்ஸியிடம் குடிப்பழக்கம் இருக்கிறதா என்று கேட்டனர். அதற்குப் பதிலளித்த டாப்ஸி "ஆம்" என ஒப்புக்கொண்டார்.
அதற்குப் பதிலளித்த விக்கி கவுசல், "ஒரு நாள் இரவு நட்சத்திர விடுதியில் டாப்ஸி அதிகமாகக் குடித்துவிட்டு அந்த விடுதியின் முன் பகுதியில் இருந்த புல்வெளியில் படுத்துவிட்டார். போதை தலைக்கு ஏறியதால் இரவு அங்கேயே படுத்து உறங்கிவிட்டு மறுநாள் காலை வீடு திரும்பலாம் என்று அடம்பிடித்தார். அவரை நான் சமாதானப்படுத்தி அங்கிருந்து அழைத்துச் செல்வதற்கு மிகவும் கஷ்டப்பட்டேன்," என்று கூறி சிரித்தார்.
இதுபற்றி டாப்ஸி கூறுகையில், "படப்பிடிப்பை முடித்துவிட்டு விடுதி ஒன்றில் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது நான் அதிகமாக குடித்துவிட்டு ரகளைச் செய்தேன். பின்னர், விக்கி என்னை அங்கேயே விட்டுவிட்டுச் சென்று விடுவேன் என்று கூறியதால் அங்கிருந்து நான் கிளம்பினேன். அன்று இருவருமே அதிக குடிபோதையில் இருந்தோம். அன்று நடந்ததை எண்ணி நான் மிகவும் வருத்தப்படுகிறேன்," என்று கூறி சிரித்தார் டாப்ஸி.