'மிஸ்டர் லோக்கல்' படம் அனைத்துத் தரப்பினரும் ரசிக்கும் வகையில் ஜாலியான படமாக உருவாகி இருப்பதாகச் சொல்கிறார் சிவகார்த்திகேயன்.
அதுமட்டுமல்ல, இந்தப் படத்தில் சமூக அக்கறை, முக்கியமான கருத்து என்றெல் லாம் எதுவும் இருக்காதாம்.
இப்படக்குழுவினர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப் போது பேசிய சிவகார்த்திகேயன், இது முழுநீள நகைச்சுவைப் படம் என்றும் ஆங்காங்கே உணர்வுபூர்வமான காட்சிகள் இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.
சமூக வலைத்தளங்களில் சிலர் குறிப்பிடு வதுபோல் இது ரஜினிகாந்த் நடித்த 'மன்னன்' படத்தின் மறுபதிப்பு என்பது தவறான தகவல் என்று தெளிவுபடுத்திய சிவா, 'மன்னன்' படத்தில் நாயகன் நாயகிக்கு இடையே ஒருவருக் கொருவர் போட்டி இருப்பதைப்போல் இந்தப் படத் திலும் இருக் கும் என்றார்.
"தலை வர் ரஜினி யின் மாஸ், அவரது ஸ்டைல் என்று சில விஷ யங் களை எதிர் பார்க்க லாம். நகைச் சுவைப் படங் களில் நடிப்பது எனக்குப் புத்துணர்ச்சி அளிக்கிறது. சரியாகச் சொல்வ தானால் 'ரெமோ'வுக்குப் பிறகு இதில்தான் நகைச்சுவையில் கூடுதலாகக் கவனம் செலுத்தியுள்ளேன்.
"இனிமேல் மூன்று படங்களுக்கு ஒரு முறை முழுநீள நகைச் சுவைப் படத்தில் நடிக்கலாம் என முடிவெடுத்துள்ளேன். முன்பு 'வேலைக்காரன்' படம் முழுக்க நிறைய கருத்துகளைச் சொல்லிவிட்டோம். அதனால் இந்தப் படத்தில் அப்படி எதுவும் இருக்காது," என்றார் சிவகார்த்திகேயன்.
இந்நிலையில் இந்த நிகழ்வின்போது ரோபோ சங்கர் பேசியது சர்ச்சையானது. அவர் தெரிவித்த சில கருத்துகளுக்குச் செய்தியாளர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
"புதுப் படத்தைப் பார்க்கும்போது செய்தியாளர் கள் ஏன் மிகவும் அமைதியாகப் பார்க்கிறீர்கள் என்பது தெரியவில்லை. குடும்பத்துடன் படம் பார்க்கப் போனாலும் இப்படித்தான் இருப்பீர்களா? இங்குள்ளவர்கள் கைதட்டி ரசித்தால்தான் வெளியே இருப்பவர்களும் அவ்வாறே ரசிப்பார்கள்.
"நல்ல நகைச்சுவையைக்கூட செய்தியாளர்கள் இப்படி முறைத்துப் பார்க்கிறார்களே என்று பலமுறை நான் பயந்திருக்கிறேன். அதனால்தான் செய்தியாளர்களுக்கான சிறப்புக் காட்சி என்றால் நான் அங்கு வருவதே கிடையாது," என்றார் ரோபோ சங்கர்.
மேலும் தாம் மேடைக்கு வந்தபோது யாரும் கைதட்டவில்லை என்றும் ஆதங்கப்பட்டார். இதனால் எரிச்சலடைந்த செய்தியாளர்கள் ரோபோவுக்கு உடனடியாகப் பதிலடி கொடுத்தனர்.
"உங்களுக்குக் கைதட்டிக் கொண்டிருந்தால் நீங்கள் பேசுவதை எப்படிக் குறிப்பெடுப்பது?" என்று கேட்டார் ஒரு செய்தியாளர்.
"ரசிகர்களுடன் சேர்ந்து முதல் நாள் படம் பார்த்தால் அவர்களது கைதட்டல் ஒலியால் வசனங்கள் எங்களுக்குப் புரிவதில்லை," என்றார் மற்றொரு செய்தியாளர். இதையடுத்துப் பேசிய சிவகார்த்திகேயன் ரோபோ சங்கருக்குத் தாமே பதிலளிப்பதாகக் கூறினார். செய்தியாளர்கள் தங்கள் பணிக்காகவே படம் பார்க்கிறார்கள் என்று குறிப்பிட்ட அவர், செய்தியாளர்களை நடிகர்கள் தங்கள் ரசிகர்கள் என்று நினைத்து விடக் கூடாது என்றார்.
"தினமும் ஒரு செய்தியாளர் சந்திப்பு அல்லது சிறப்புக் காட்சி என்றால், அவர்களும் ரசித்துப் படம் பார்ப்பார்கள். ஆனால் தினமும் இரண்டு சந்திப்புகள், இரண்டு சிறப்புக் காட்சிகள் என்றால் அவர்களும் என்னதான் செய்வார்கள்?
"நாம் ஒரு படத்தை மட்டுமே பார்க்கிறோம். அவர்களோ அனைத்துப் படங்களையும் பார்த் தாக வேண்டும். செய்தியாளர்கள் நமது ரசிகர் கள் அல்ல. அவர்கள் தங்கள் பணிக்காக வந்துள்ளனர். அண்ணே.. இப்போதாவது புரிகிறதா?" என்று சிரித்தபடியே கேள்வி எழுப்பி செய்தியாளர்களையும் சமாதானப்படுத்தினார் சிவகார்த்திகேயன்.
'வேலைக்காரன்' படத்தில் நயன்தாராவை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவே இல்லை என்ற வருத்தம் தமக்கு இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், இந்தப் படத்திலாவது அவரை கச்சிதமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைத் தாராம்.
"இது ஜாலியான படம். அதனால் வில்லன் என்று யாரும் இல்லை. எனவேதான் நயன்தாரா போன்ற ஒரு நாயகி இருக்கவேண்டும் என நினைத்தேன். மேலும் இந்தப் படத்தின் பலமே நடிகர்கள்தான். அதை படம் பார்க்கும்போது ரசிகர்கள் நிச்சயம் உணர்வார்கள்," என்றும் சிவகார்த்திகேயன் மேலும் கூறினார்.