சூர்யாவுடன் 'என்.ஜி.கே.' படத்தில் நடித்துள்ளார் ரகுல் ப்ரீத் சிங். அவர் இதுவரை பல படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் இந்தப் படத்தின் மூலம்தான் நடிக்கக் கற்றுக் கொண்டதாகக் கூறுகிறார். அதுபற்றி அவர் கூறுகையில், "என்.ஜி.கே.' படத்தில் வசனம் பேசி நடிக்கும்போது கண் சிமிட்டக்கூடாது. மூச்சு விடும்போது தோள்பட்டை அசையக்கூடாது என்பது உள்பட பல விஷயங்களை இயக்குநர் செல்வராகவன் எனக்குக் கற்றுக்கொடுத்தார். "நடிக்கும்போது உடல் அசைவுகள் இப்படித் தான் இருக்கவேண்டும் என்று நடித்துக் காட்டுவார். '3 நொடி விதி' ஒன்றை அறிமுகம் செய்தார். நடிகர்களிடம் இருந்து நடிப்பை வாங்குவது மட்டுமின்றி, 'எடிட்டிங்' செய்யும்போது காட்சி தெளிவாக வர ஒருவர் வசனம் பேசி முடித்ததும் மற்றொருவர் உடனே ஆரம்பிக்கக்கூடாது. 3 நொடிகள் தாமதித்து ஆரம்பிக்கவேண்டும்.
"ஒருவேளை அதை மறந்து நடிக்க ஆரம்பித்தால், 'கட்' சொல்லி மீண்டும் அதேக் காட்சியை நடிக்கச் சொல்லுவார். எத்தனை முறை அதேக் காட்சியை நடிக்கிறோம் என்ற கணக்கு எனக்குத் தெரியாது. முகத்தில் மட்டுமல்ல, உடல் அசைவிலும் அந்த வேடத்தின் குணாதிசயம் வரும்வரை விடாமல் நடிக்கச் சொல்லுவார். "அவர் படத்தில் நடித்ததன் மூலம் நடிப்பு பற்றி பல விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். இயக்குநர் செல்வராகவன் எனக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த ஆசிரி யர்," என்று பாராட்டுப் பத்திரம் வாசிக்கிறார் ரகுல் ப்ரீத் சிங்.

