உடல் தோற்றத்தையும் நிறத்தையும் கிண்டல் செய்யாதீர்கள் என்று பிரபல ‘பாலிவுட்’ நடிகை வித்யா பாலன் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
வித்யா பாலன் தற்போது தமிழில் அஜித் நடிக்கும், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் முக்கிய வேடம் ஏற்று நடிக்கிறார். தமிழில் தான் வித்யா பாலன் முதலில் அறிமுகமாகி இருக்கவேண்டும். தமிழ் இயக்குநர்கள் நிராகரித்ததால் ‘பாலிவுட்’டுக்குச் சென்று அங்கு முன்னணி நடிகையாகிவிட்டார்.
ஒரு சிலர் வித்யா பாலனின் பருமனான தோற்றத்தைக் கிண்டல் செய்ததை ஒரு பேட்டியில் அவர் பகிர்ந்து இருக்கிறார். அதுபற்றி வித்யா பாலன் கூறும்போது, “யாருடைய உடல் தோற்றத்தையும் நிறத்தையும் கிண்டல் செய்து சிரிக்காதீர்கள். ஒவ்வொருவரும் வித்தியாசமானவர்கள்.
“எல்லோருமே ஒரு வகையில் சிறப் பானவர்கள்தான். திரைத்துறையில் நான் நுழைந்த காலகட்டத்தில் பலரும் என் மனவலிமையைப் பலவீனப்படுத்தும் வகையில் அவமரியாதை செய்தார்கள். குண்டு பெண் என்று அழைத்துக் கேலி செய்தார்கள்.
“அது எனது தன்னம்பிக் கையைப் பாதித்தது. உடல்தோற்றம் மட்டுமே ஒருவரை சாதனையாளராக்கப் போவதில்லை என்பதை கிண்டல் பேசுபவர்கள் உணர வேண்டும்,” என்று அவர் வருத்தத்துடன் தெரிவித்தார்.