இந்தியில் முன்னணி நட்சத்திரமாகத் திகழும் டாப்சி நடித்துள்ள ‘கேம் ஓவர்’ படம் ஜூன் 14ல் வெளியாகிறது. இவர் டுவிட்டரில் “நாங்கள் பல கஷ்டங்களைத் தாங்கிக்கொண்டு படங்களில் நடிக்கிறோம். எங்களின் பகட்டான வெளிப்பார்வையைப் பார்த்து பலர் பொறாமைப்படுகின்றனர்,” என்று திரையில் நடிப்பவர்களின் கஷ்ட நஷ்டங்களைப் பதிவிட்டுள்ளார்.
இவர் நடிப்பில் ‘கேம் ஓவர்’ படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகின்றன. அவர் இணையத்தில், “இந்தப் படத்தில் நடிக்கும்போது என்னுடைய கைகளில் ஒருவித தொற்று ஏற்பட்டு கை நரம்புகள் வெடித்துவிடும்போல் ஆனது. மேலும் ஒரு காட்சியில் நடிக்கும்போது கீழே விழுந்து என் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதனால் கட்டுப்போட்டுக்கொண்டு வீட்டில் ஓய்வு எடுத்தேன்.
“இதையெல்லாம்விட பனிமலையில் புடவையுடன் நடிப்பது மிகவும் கடினமான செயல். அதையெல்லாம் தாங்கிக்கொண்டு நடித்தால்தான் நல்ல பெயர் எடுக்கமுடியும். அதனால்தான் ‘பாலிவுட்’டில் முன்னணி நடிகையானேன்.
‘கேம் ஓவர்’ படத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். கட்டாயம் இந்தப் படமும் எனக்கு நல்ல பெயர் வாங்கித் தரும் என்று நம்புகிறேன்,” என்று பதிவிட்டு, படத்தில் நடிக்கும்போது தனக்கு கால், கைகளில் ஏற்பட்ட காயங்களை இணையத்தில் வெளியிட்டு இதுதான் நடிகர்களின் வாழ்க்கை என்று பதிவிட்டிருக்கிறார்.
நடிகை டாப்ஸி தற்போது ‘பாலிவுட்’டில் முன்னணி நாயகியாக வலம் வருகிறார். பெண் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார்.
அண்மையில் வெளியான ‘பாத்லா’ படம் டாப்சிக்கு நல்ல பெயர் பெற்றுத் தந்தது. படத்தின் இறுதிக் காட்சிகளில் அவரது நடிப்பு அபாரமாக இருந்தது என்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பெரிதும் பாராட்டி வருகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் துப்பாக்கிச் சுடுதலில் புகழ்பெற்ற சந்த்ரோ தோமா, பிரகாஷி தோமா ஆகியோரின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்படும் ‘சான்த் கி ஆங்க்’ என்ற இந்திப் படத்தில் 60 வயது மூதாட்டியாக நடித்துள்ளார் டாப்சி.
‘கேம் ஓவர்’ படத்திற்கான விளம்பர வேலைகள் வேகமாக நடக்கின்றன. இதற்காக நடத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பிற்கு நடிகை டாப்ஸியும் மும்பையில் இருந்து வந்தார்.
ஒரு நிருபர், “நீங்கள்தான் தற்போது பட உலகின் ‘லேடி சூப்பர் ஸ்டாரா’? எனக் கேட்டார்.
அந்தக் கேள்விக்கு உடனே, “அப்படியெல்லாம் மிக கூடுதலான உயரத்துக்கு என்னைக் கொண்டு சென்று விடாதீர்கள். ஒரு படத்துக்கு நான் மூன்று கோடி ரூபாய்தான் வாங்குகிறேன். என்னைவிட இரு மடங்கு அதிகமாக ஆறு கோடி ரூபாய் வாங்கும் நடிகை நயன்தாராதான் உண்மையிலேயே ‘லேடி சூப்பர் ஸ்டார்’. அவர் அளவுக்கு நான் வர வேண்டும் என்றால் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும்,” என்றார் டாப்சி.