இயக்குநர்கள் வெற்றிமாறன், ஆனந்த் ராய் ஆகியோரின் இயக்கத்தில் நடிப்பது, தான் நடித்த ஹாலிவுட் படம் வெளியீடு காண்பது என அடுத்தடுத்து நல்ல நிகழ்வுகள் நடக்கப் போவதையடுத்து உற்சாகத் துடன் காணப்படுகிறார் தனுஷ்.
ஹாலிவுட்டில் தாம் பெரிய நாயகனாக வலம் வரவில்லை என்றாலும், அங்கு கற்றுக் கொண்ட பல விஷயங்கள் மூலம் கோடம்பாக் கத்தில் கூடுதலாக சிலவற்றைச் சாதிக்க முடியும் என்கிறார். குறிப்பாக படத் தயாரிப்பு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஹாலிவுட்டில் பல நல்ல நுணுக்கங்களை, திட்டமிடுதலை கற்றுக்கொண்டதாகச் சொல்கிறார்.
அண்மைய பேட்டி ஒன்றில் அவர் மனம் திறந்து பேசியவற்றை ரசிகர்கள் நிச்சயம் ஒவ்வொரு வரியாகப் படித்து மகிழ்வார்கள்.
“தமிழ், தெலுங்கு, இந்தி என்று அடுத்தடுத்து நடித்து முடித்த பிறகு ஹாலிவுட் தான் எனது இலக்காக இருந்திருக்கும் என்று பலரும் பேசிக் கொள்கிறார்கள். ஹாலிவுட் வாய்ப்பை பெறுவதில் நான் முனைப்பாக இருந்ததாகக் கூறப்படுவது தவறு.
“அது எதேச்சையாக நடந்த ஒன்று. ‘ராஞ்சனா’ இந்திப்பட வாய்ப் பும் இப்படித்தான் அமைந்தது. ஹாலிவுட் படத்தின் கதைக்கு நான் தேவைப்பட்டி ருக்கிறேன். ஆக அந்தப் படம்தான் என்னைத் தேடிப் பிடித்தது எனலாம்.
“அப்படியொரு வாய்ப்பு கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி. இப்படியான படங்களில் நடிப்பதையே நானும் விரும்புகிறேன்,” என்று புன்னகையுடன் குறிப்பிடும் தனுஷ், இப்படத்துக்காக சில மாய நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டாராம்.
தயாரிப்புத் தரப்பில் தொடக்கத்திலேயே இதுகுறித்து தகவல் கூறிவிட்டனராம். எனினும் அவர்கள் குறிப்பிட்ட மாய நுணுக்கங்கள் மிகவும் எளிதானதாக இருந்ததால், சீக்கிரம் கற்றுக்கொண்டாராம்.
“மாயாஜாலம் (மேஜிக்) என்பது எல்லோரையுமே கவரக்கூடிய விஷயம். மாய வித்தைகளைக் கற்ற அனுபவம் மறக்கவே இயலாத ஒன்று.
“ஹாலிவுட்டில் நிறைய கற்றுக் கொண்டேன். அடிப்படை அம்சங்களில் நமக்கும் ஹாலிவுட்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. எல்லாமே ஒரே மாதிரிதான் உள்ளன. ஆனால் சிலவற்றை அவர்கள் முன்கூட்டியே திட்ட மிடுவதுதான் நாம் கவனிக்க வேண்டிய அம்சம்.
“திட்டமிட்டுச் செயல்படுவதன் மூலம் எந்த ளவு பணத்தை மிச்சப்படுத்த முடியும் என்று யோசிக்கிறார்கள். இந்த நடைமுறையை நாமும் பின்பற்றுவதன் மூலம் திரையுலகம் மேலும் ஆரோக்கியமடையும்,” என்கிறார் தனுஷ்.
ஹாலிவுட்டில் தங்கியிருந்த வேளையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல திறமை சாலிகளை, நல்ல கலைஞர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததாகச் சொல்பவர், அனைவ ரும் இத்தகைய அனுபவங்களைப் பெற வேண் டியது அவசியம் என்கிறார்.
தொடர் நஷ்டங்கள் காரணமாக தனுஷ் தமது படத் தயாரிப்பு நிறுவனத்தை மூடி விட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லையாம். அத்தகைய எண்ணம் தமக்கு அறவே இல்லை என்கிறார்.
தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் ‘அசுரன்’, ‘கொடி’ துரை இயக்கத்தில் தலைப்பிடப்படாத படம் ஆகியவற்றில் நடித்துக் கொண்டிருக்கிறார் தனுஷ். மேலும் அடுத்து ஒரு படத்தை இயக்குவது எனவும் முடிவு செய்துள்ளார். அதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகக் கூடும்.