மீண்டும் ஒரு சர்ச்சையில் அமலா பால்

மீண்டும் ஒரு சர்ச்சையில் அமலா பால்

3 mins read
ca1b7edf-8599-4ad1-92f0-7b65c10ab510
-

இனி கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பது என்பதில் உறுதியாகவும் தெளிவாகவும் உள்ளார் அமலா பால். அவரது அண்மைய கதைத் தேர்வுகளும் நடிக்கும் படங்களும் நமக்கு இதை தெளிவு படுத்துகின்றன.

அமலா நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள 'ஆடை' ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. அதே சமயம் 'ஆடை'யைச் சுற்றி சில சர்ச்சைகளும் வலம் வருகின்றன.

இப்படத்தின் முதல் சுவரொட்டி வெளியானபோதே சர்ச்சை தொடங்கிவிட்டது. அதில் உடலை மறைக்கும் ஒற்றைத் துண்டுடன் காட்சியளிப்பார் அமலா. அவர் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத் தப்பட்டது போன்ற தோற்றம் இருந்தது.

மேலும் அவர் கண்ணீர் விட்டு உரக்க கதறும் காட்சியை அதில் பதிவு செய்திருந்தனர். பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணைப் பற்றிய பதிவாகக் கருதப்பட்டாலும், அச்சுவரொட்டி சற்றே ஆபாசமாக இருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் 'ஆடை' முன்னோட்டக் காட்சியை இணையம் வழி வெளியிட்டுள்ளனர். பிரபல இந்தி திரையுலகப் புள்ளி கரண் ஜோகர் முன்னோட்டக் காட்சித் தொகுப்பை வெளியிட்டதுடன், படக் குழுவினருக்கும் தனது பாராட்டுகளைத் தெரிவித்து உள்ளார்.

"நமக்கு என்ன செய்யப்பட்டதோ அதை வைத்து நாம் என்ன செய்கிறோம் என்பதுதான் சுதந்திரம். திரையுலகில் உள்ள பல்வேறு தடைகளைத் தகர்க்கும் வகையில் உருவாகியுள்ளது 'ஆடை'. தைரியமான, அழகான பெண்ணாக காட்சி தருகிறார் அமலா பால்," என்று தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார் கரண் ஜோகர்.

ஆனால் ஒன்றரை நிமிடம் மட்டுமே ஓடக்கூடிய முன்னோட்டக் காட்சியும் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. தனது மகளைக் காணவில்லை என்ற தவிப்புடன் ஒரு தாய் போலிசில் புகார் செய்யும் காட்சியுடன் துவங்கு கிறது முன்னோட்டத் தொகுப்பு.

அதையடுத்து பெரிய நிறுவனங்கள் இயங்கும் பிரம்மாண்ட கட்டடத்தின் ஒரு பகுதியில் அலங் கோலமாகக் கிடக்கும் அமலா பால் கண் விழித்துப் பார்க்கிறார். அப்போது அவர் நிர்வாணமாக இருப்பது போன்று காட்சி சித்திரிக்கப்பட்டுள்ளது.

இதுவும் ஒரு வகையில் தேவையற்ற கவர்ச்சித் திணிப்பு தான் என்றும் சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்படுகிறது. ஆனால் அமலா எத்தகைய விமர்சனத்துக்கும் அசைந்துகொடுப்பதாக இல்லை. இதற்கிடையே இப்படத்துக்கு தணிக் கையின் முடிவில் 'ஏ' சான்றிதழ் அளிக்கப் பட்டுள்ளது.

"சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில்தான் படப்பிடிப்பை நடத்தினோம். இதில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றிருப் பவர்களில் பெரும்பாலானோர் புதுமுகங்கள். பிரதீப் குமார் இசையில் பாடல்கள் நன்றாக அமைந்துள்ளன.

"நிபந்தனையற்ற உங்களது அன்பாலும் ஆதரவாலும் எனது அடுத்த பயணத்தைத் துவங்கி உள்ளேன். என்றும் உங்கள் பிரார்த் தனையில் நான் இருக்க வேண்டும். உங்கள் வீட்டுப் பெண்ணான நான் வெற்றி பெற வாழ்த்துங்கள்," என தமது சமூக வலைப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் அமலா பால்.

தற்போது முன்னணி இயக்குநர் ஒருவரது படத்தில் நடிப்பது குறித்து அமலா பால் பேச்சு வார்த்தை நடத்திவருவதாகவும் மிக விரைவில் இது குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது எனவும் கோடம்பாக்கத்து விவரப் புள்ளிகள் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையே மலையாளத்திலும் குறைந்த சம்பளம் பெறும் நடிகைகள், தமிழில் நடிக்கும் போது மட்டும் அதிக தொகை கேட்பதாக ஒரு புகார் எழுந்துள்ளது. அந்தப் பட்டியலில் அமலா பாலின் பெயரும் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படு கிறது. ஆனால் இது தவறான தகவல் என்கிறார் அமலா.

"எனக்கு கதை மட்டுமே முக்கியம். மற்றவை எல்லாம் அதற்குப் பிறகுதான். என் திறமைக்கும் உழைப்புக்கும் ஏற்பவே சம்பளம் பெறுகிறேன். வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை," என முற்றுப்புள்ளி வைக்கிறார் அமலா பால்.