கல்விக் கொள்கை உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் கவனம் செலுத்தாமல், கருத்துகளை முன் வைக்காமல் நம்மில் பலரும் அமைதியாக இருப்பது தவறு என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
இத்தகைய அமைதியானது நமது குழந்தைகளின் எதிர்காலத்தை வெகுவாகப் பாதிக்கும் என்றும் அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசு தற்போது தேசியக் கல்விக் கொள்கை வரைவை வெளியிட்டுள்ளது. வரும் 30ஆம் தேதி வரை இதுகுறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து புதிய கல்விக் கொள்கை குறித்து பெற்றோர் அனைத்தையும் அறிந்துகொள்வது அவசியம் என சூர்யா வலியிறுத்தி உள்ளார்.
“கல்விக்காக தங்கள் வாழ்வையே அர்ப்பணிக்கும் பெற்றோர் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக தங்களுக்கு ஏற்புடைய, ஏற்பில்லாத அம்சங்கள் குறித்து கருத்து தெரிவிக்க வேண்டும். பெற்றோரின் பங்களிப்பு மட்டுமே பிள்ளைகளுக்கு நல்ல கல்வியையும் எதிர்காலத்தையும் அளிக்கும். கல்வியே ஆயுதம்; கல்வியே கேடயம்,” என்று சூர்யா தமது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.