நடிகை அமலா பால் நடித்த 'ஆடை' படத்தின் முன்னோட்டக் காட்சி நேற்று வெளியாகியது. அதில் அவர் பேசிய வசனங்களால் படத்தைப் பற்றிய சர்ச்சைகள் அதிகமாகியுள்ளது.
கைவசம் நிறைய படங்கள் இல்லை என்றாலும் எப்போதும் ஏதவாது ஒரு சர்ச்சையில் சிக்கி தவிப்பவர் நடிகை அமலா பால். இவர் தற்போது 'மேயாத மான்' பட இயக்குநர் ரத்னகுமார் இயக்கியுள்ள 'ஆடை' படத்தில் நடித்துள்ளார். படத்தின் முதல் சுவரொட்டியில் அமலா பால் ஆடையில்லாமல் காகிதத்தை உடல் முழுவதும் சுற்றியிருப்பது போன்று வெளியான படத்தால் பல சர்ச்சைகள் எழுந்தன. அந்தச் சர்ச்சைகள் அடங்கு வதற்குள் படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியாகியுள்ளது.
அதில் மிகவும் தைரியமான பெண்ணாகத் தோன்றும் அமலா பால், சிகரெட் பிடித்துக்கொண்டு நண்பர்களோடு பேசி வருகிறார். அப்பொழுது "பிறக்கும்பொழுது உடையுடனா பிறந்தோம்," என்று அவர் பேசியுள்ளது மீண்டும் ஒரு சர்ச்சையைக் கிளப்பி யுள்ளது.
பெண் ஓர் இடத்தில் ஆடை இல்லாமல் மாட்டிக் கொள்கிறார். அதிலிருந்து அவர் எப்படி மீண்டு வருகிறார் என்பதே படத்தின் கதையாகும். வரும் 19ஆம் தேதி இந்தப் படம் வெளியாகவுள்ளது.

