கல்வி வியாபாரமாகிவிட்ட இன்றைய சூழலில், நல்ல ஆசிரியர்களாலும், நல்ல மாணவர்களாலும் பெற்றோர்களாலும் சமூகத்தில் அமைதி நிலவுவதாக நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.
தனது தந்தை சிறந்த மாணவர்கள் தொடர்ந்து நல்ல கல்வி பெறுவதற்கு ஊக்கமளித்து வருவது பெருமை அளிப்பதாக அவர் கூறியுள்ளார்.
நடிகர் சிவகுமாரும் அவரது வாரிசுகளான நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகிய இருவரும் அகரம் அறக்கட்டளை மூலம் கல்விப்பணி செய்து வருகிறார்கள். ஆண்டுதோறும் சிறந்த மாணவர்களுக்கு இந்த அறக்கட்டளை பரிசுகள் வழங்கி வருகிறது.
இந்த நிலையில் 40வது ஆண்டு பரிசளிப்பு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய கார்த்தி, கடந்த 1979ஆம் ஆண்டு தனது தந்தை நூறாவது படத்தில் நடித்துக் கொண்டிருந்த போதே கல்வி அறக்கட்டளையைத் துவங்கிவிட்டதாக குறிப்பிட்டார்.
"மறைந்த முதல்வர் எம்ஜிஆர் இதைத் தொடங்கி வைத்தார். நூறாவது படத்தின் சம்பளத்தை மொத்தமாக இருப்பு வைத்து, அதன் வழி கிடைத்த வட்டியை வைத்து பரிசு வழங்கப்பட்டு வந்தது.
"திரையுலகமும் பொதுமக்களும் அப்பாவின் (சிவகுமார்) பரிசளிப்பு விழாவை எப்போதும் நினைவில் வைத்திருப்பார்கள். எந்தச் சின்ன ஊருக்குச் சென்றாலும்கூட அப்போதே சிவகுமார் நன்றாகப் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு பரிசளிப்பாரே என்பார்கள்.
"சின்னச் சின்ன ஊர்களில் இருந்தெல்லாம் மாணவர்கள் எங்கள் வீட்டைத் தேடி வருவார்கள். முதல் 25 ஆண்டுகளுக்கு பரிசளிப்பு விழா, எங்கள் வீட்டிலேயே குடும்ப நிகழ்ச்சியாக நடந்தது.
"அப்போது விழாவுக்கு வருபவர்கள் எல்லோரும், 'அடுத்த ஆண்டு நீங்க பரிசு வாங்கிவிடுவீர்கள் அல்லவா?' என்று என்னிடம் கேட்பார்கள். அந்தக் கேள்வியைத் தவிர்க்கவே நானும் அண்ணனும் தப்பித்து ஓடுவோம்," என்று சிரித்தபடியே தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார் கார்த்தி.
இதையடுத்துப் பேசிய நடிகர் சூர்யா, கல்வித் திணிப்பைத் தவிர்க்க வேண்டும் என்றார்.
தேசியக் கல்விக் கொள்கையானது மூன்று வயதிலே மும்மொழிக் கல்வியைத் திணிப்பதாக விமர்சித்த அவர், ஆசிரியரே இல்லாமல் நீட் தேர்வு எழுதுவது எப்படி? என்று கேள்வி எழுப்பினார்.
தேசியக் கல்விக் கொள்கை குறித்து அனைத்துப் பெற்றோரும் தங்கள் கருத்தை தெரிவிக்க வேண்டியது அவசியம் என்றும் சூர்யா கூறினார்.