‘ஆடை’ படத்துக்காக நிர்வாணக் காட்சிகளில் தயக்கமின்றி நடித்ததாக அமலா பால் கூறியுள்ள நிலையில், அந்தக் காட்சிகளை நீக்க வேண்டும் என கோரி்க்கை எழுந்துள்ளது.
திடீரென கிளம்பியுள்ள இந்த எதிர்ப்பால் இப்படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
‘ஆடை’ படம் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ராஜேஸ்வரி பிரியா என்ற பெண் அரசியல் பிரமுகர், நிர்வாணக் காட்சிகளை நீக்க வலியுறுத்தி காவல்துறை ஆணையரிடம் மனு அளிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
இவர் ஏற்கெனவே பெண்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் குட்டைப்பாவாடை அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர். தற்போது ‘ஆடை’ படத்துக்கு எதிராக இவர் குரல் கொடுத்திருப்பது அப்படக் குழுவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இதற்கிடையே பெற்றோர் சம்மதத்துடன் தான் ‘ஆடை’யில் நடித்ததாக அமலாபால் கூறியுள்ளார்.
பட வெளியீட்டை ஒட்டி அளித்துள்ள பேட்டி ஒன்றில், நிர்வாணக் காட்சிகளில் நடித்த வகையில் தமக்கு எந்தவிதத்திலும் தர்மசங்கடமும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
“நிறைய படங்களில் பாடல் காட்சிகளில் மட்டும் கவர்ச்சி காட்ட சொல்வார்கள். அப்போதுதான் தர்மசங்கடம் ஏற்படும். ஆனால் ‘ஆடை’யில் நடித்த நிர்வாணக் காட்சியில் தேவையற்ற கவர்ச்சியோ ஆபாசமோ இல்லை. ரசிகர்களும் எனது இந்தக் கருத்தின் அடிப்படையில் அக்காட்சியை ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
“பெற்றோர் சம்மதத்துடன்தான் ‘ஆடை’ படத்தில் நடித்தேன். குறிப்பாக என் தாயாரிடம் நிர்வாணக் காட்சியில் நடிக்க இருப்பதை கூறினேன். முதலில் அதிர்ச்சி அடைந்தார். பிறகு நல்ல கதையா? என்று மட்டும் கேட்டார். நியாயமான கதை என்றதும் சம்மதித்தார்,” என்று அமலா பால் தெரிவித்துள்ளார்.
நடிகை ஆக விரும்புவதாக தன் தந்தையிடம் தெரிவித்து, அவரது அனுமதியுடனேயே நடிக்க வந்ததாக குறிப்பிட்டுள்ள அமலா, எத்தகைய வேடத்திலும் தயங்காமல் நடிக்க வேண்டும் என தனது தந்தை அறிவுரை கூறியதாகத் தெரிவித்துள்ளார்.
‘நாய் வேடம் போட்டால் குரைத்து தான் ஆக வேண்டும்’ என்பதுதான் அமலாவுக்கு அவரது தந்தை கூறிய அறிவுரையாம். அதை மனதிற்கொண்டே இந்நாள் வரை நடித்துக் கொண்டிருப்பதாகக் கூறியுள்ளார்.
“நிர்வாணக் காட்சியில் நடித்த பின்னர் மனதில் தைரியம் அதிகரித்துள்ளது. உறுதியான பெண்ணாகவும், பலம் மிக்கவளாகவும் உணர்ந்தேன்.
“இது சவாலான கதாபாத்திரம், சர்ச்சையை ஏற்படுத்த வாய்ப்புள்ள காட்சி என்பது நன்கு தெரியும். இதை எப்படிச் சமாளிக்கப் போகிறோம் என்பது தெரியாமலேயே நடித்து முடித்தேன். இதுதான் உண்மை.
“இந்தக் காட்சியை, இந்தப் படத்தை உலகமே பார்க்கப் போகிறது என்ற எண்ணமும் மனதில் இருந்தது,” என்று கூறியுள்ளார் அமலா.
முதல் நாள் படப்பிடிப்பில் பயம், பாதுகாப்பின்மை என எல்லாமே மனதில் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், அதன் பிறகு அத்தகைய எண்ணம் எல்லாம் மனதை விட்டு அறவே அகன்று போனதாகச் சொல்கிறார்.
“அடுத்தடுத்த நாட்களில் நான் என்னை பலம் வாய்ந்த பெண்ணாக உணர்ந்தேன். இது ஓர் அலாதியான உணர்வு. அனைவருக்கும் இப்படி நடப்பதில்லை. ஆனால் எனக்கு நடந்த வகையில் எனக்கு மகிழ்ச்சி.
“என்னைப் பொருத்தவரை நான் பெரிதாக எதையும் திட்டமிடுவதில்லை. அதே சமயம் ஏதேனும் ஒன்றை திட்டமிட்டால் அதை நோக்கிச் செல்வதில் தயக்கம் காட்டியது இல்லை. இன்றளவும் என்னை இந்த முடிவுதான் நடைபோட வைக்கிறது,” என்று அமலா பால் மேலும் தெரிவித்துள்ளார்.