அஜித் நடித்திருக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளியாகிறது. இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள இப்படம், ரசிகர்கள் மத்தியிலும் கோடம்பாக்கத்திலும் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
படப்பிடிப்பும் தொழில்நுட்பப் பணிகளும் முடிவடைந்த நிலையில், தணிக்கை அதிகாரிகள் இப்படத்தை அண்மையில் பார்த்தனர். இதையடுத்து ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் ஆகஸ்ட் 10ஆம் தேதி படம் வெளியாகும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இரு தினங்களுக்கு முன்னதாகவே வெளியீடு காணும் என இப்போது அறிவித்துள்ளனர்.
அதன்படி, ஆகஸ்ட் 8ஆம் தேதி ‘நேர்கொண்ட பார்வை’ ரசிகர்களைச் சந்திக்க உள்ளது. இந்தியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற பிங்க் படத்தின் மறுபதிப்புதான் இது.
ஷ்ரத்தா ஸ்ரீநாத், டெல்லி கணேஷ், ரங்கராஜ் பாண்டே, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
‘நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து அஜித் நடிக்கவுள்ள அடுத்த படத்தையும் இயக்கப் போவது வினோத் தான்.