இந்திப் படங்களில் அதிகம் நடிக்கவேண்டும் என விரும்புகிறார் பிரியா வாரியர். தற்போது ‘ஸ்ரீதேவி பங்களா’வைத் தொடர்ந்து மேலும் இரு இந்திப் படங்களில் ஒப்பந்தமாகி உள்ளாராம்.
அவற்றுள் ஒரு படத்துக்கு ‘லவ் ஹேக்கர்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். ‘ஸ்ரீதேவி பங்களா’ படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டது முதலே சர்ச்சைகளும் அணிவகுக்கத் தொடங்கி விட்டன.
இந்தத் தலைப்பை மாற்ற வேண்டும் என ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் வலியுறுத்தினார். மேலும், படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளுக்கு எதிராகவும் அவர் போர்க்கொடி உயர்த்தினார். இதற்குப் படக்குழு ஒப்புக்கொள்ளாததால் நீதிமன்றத்தை அணுகியுள்ளார் போனி கபூர்.
இந்நிலையில் இந்தியில் முதல் படமே சர்ச்சைக்குள்ளானது வருத்தமளிக்கிறதா என்று கேட்டால் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்கிறார் பிரியா.
“என்னைப் பொறுத்தவரை எனக்கு அளிக்கப்பட்ட கதாபாத்திரம் மட்டுமே முக்கியம். யாரையும் காயப்படுத்துவது, மனம் வருந்தச் செய்வது என்பது நோக்கமல்ல. தரமான ஒரு படைப்பை ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என்பதில் மட்டுமே கவனமாக இருக்கிறோம்.
“மற்றபடி இப்படத்துக்குக் கிளம்பியுள்ள எதிர்ப்புகள், வழக்குகள் குறித்தெல்லாம் தயாரிப்பாளரும் இயக்குநரும்தான் கவலைப்பட வேண்டும்,” என்று சொல்லும் பிரியா வாரியர் ஸ்ரீதேவியின் பெரும் ரசிகையாம். ஸ்ரீதேவி நடித்த பல படங்கள் தன்னை வெகுவாகக் கவர்ந்ததாகச் சொல்கிறார்.
அவரது நற்பெயருக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் ஏதும் நடந்துவிடக்கூடாது என்பதில் தமக்கும் அக்கறை இருப்பதாகச் சொல்கிறார் ஸ்ரீதேவி.
“இப்போதுதான் எனது திரைவாழ்க்கையைத் துவங்கி உள்ளேன். அதற்குள் எதிர்மறையான விஷயங்கள் தொடர்பாக எனது பெயர் அடிபடக்கூடாது என்பதில் திட்டவட்டமாக உள்ளேன். யாரையும் காயப்படுத்துவது நோக்கமல்ல என்று தெளிவாகச் சொன்னாலும், சில சர்ச்சைகள் முளைத்துள்ளன என்பதையும் மறுப்பதற்கில்லை,” என்கிறார் பிரியா.
தனது முதல் படத்தில் ஒரு காட்சியில் கண்ணடித்ததன் மூலம் நாடு முழுவதும் இவர் பிரபலமானது தெரிந்த சங்கதிதான். ஆனால், அடுத்துவரும் படங்களிலும் அதேபோன்று துறுதுறுவென ஏதாவது செய்யுங்கள் என்று கேட்கிறார்களாம்.
“மலையாளத்தில் நான் அறிமுகமான படத்தில் காட்சியின் தேவைக்காக அப்படி கண்ணடித்து நடிக்க வேண்டி இருந்தது. ஆனால், இந்தப் படம் என்னைப் பற்றி ரசிகர்கள் மனதில் ஏற்படுத்தி உள்ள தோற்றத்தை உதறித்தள்ள விரும்பு கிறேன்.
“கண்ணடித்தது அந்தப் படத்துடன் முடிந்துபோன விஷயம். அதைத் தொடர்ந்து செய்வதில் விருப்பமில்லை. மாறாக, வெவ்வேறு நல்ல கதாபாத்திரங்களை நடித்து என்னை முழுமையான நடிகையாக மாற்றிக் கொள்வதே எனது விருப்பம்.
“குறிப்பாக, இந்திப் படங்களில் அதிகம் நடிக்க விரும்புகிறேன். ஏனெனில் அவை உலகளவில் நம்மைக் கொண்டு சேர்க்கும்.
“தற்போது நடிக்க ஒப்பந்தமாகியுள்ள ‘லவ் ஹேக்கர்’ இந்திப் படம் இணையக் குற்றங்கள் தொடர்பான கதைக்களம் கொண்டு உருவாகி உள்ளது.
“நிச்சயம் இளம் ரசிகர்களைக் கவரும் வகையில் பரபரப்பான காட்சிகள் இடம்பெற்றிருக்கும். மும்பை, டெல்லி, லக்னோ உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த உள்ளோம்,” என்று உற்சாகமாகப் பேசும் பிரியா, வீண் சர்ச்சைகளில் சிக்க விரும்பவில்லை என்கிறார்.
சர்ச்சைகள் பொன்னான நேரத்தை வீணடித்துவிடும் என்றும் கவலைப்படுகிறார்.
“பொதுவாக நான் அமைதி யாக வேலைகளைச் செய்ய விரும்புவேன். மாறாக சர்ச்சைகளும் பிரச்சினைகளும் இருப்பின் நம்மால் எதையும் உருப்படியாகச் செய்ய முடியாது.
“தற்போது நடிப்பில் மட்டுமே எனது கவனம் உள்ளது. தேவையற்ற விஷயங்கள் தொடர்பாக நான் யாரிடமும் எதுவும் பேசுவதே இல்லை,” என்கிறார் பிரியா.