மல்லிகா ஷெராவத்தின் பாலியல் புகார்

மல்லிகா ஷெராவத்தின் பாலியல் புகார்

2 mins read
11bbb30b-6160-4a14-bc7d-1921f3b3f594
கதாநாயகர்களின் விருப்பத்திற்கு இணங்காததால் பல படங்களிலிருந்து வெளியேற்றப்பட்டதாக பகிரங்கமாக புகார் தெரிவித்திருக்கிறார் மல்லிகா ‌ஷெராவத். படம்: ஊடகம் -

பாலிவுட்டின் கனவுக்கன்னி என்று பலராலும் அழைக்கப்படுபவர் மல்லிகா ஷெராவத். இவர் திரைத்துறையில் கதாநாயகர்களின் விருப்பத்திற்கு இணங்காததால் பல படங்களிலிருந்து வெளியேற்றப்பட்டதாக பகிரங்கமாக புகார் ஒன்றைத் தெரிவித்து இருக்கிறார்.

கமல்ஹாசனுடன் 'தசாவதாரம்' படத்தில் நடித்தவர் மல்லிகா ஷெராவத். சிம்புவின் 'ஒஸ்தி' படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். இந்தியில் அதிக படங்களில் கவர்ச்சியாக நடித்துள்ளார். தற்பொழுது இணையத் தொடர்களிலும் நடித்து வருகிறார். திரைப்படத்தில் பாலியல் தொல்லைகள் இருப்பதாகவும் பட வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாகவும் ஏற்கெனவே புகார்கள் கிளம்பின.

இப்போது மல்லிகா ஷெராவத்தும் நடிகர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காததால் நிறைய பட வாய்ப்புகளை இழந்ததாக குற்றம் சாட்டி உள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, "என் மீது பல குற்றச்சாட்டுகள் இருந்தன. நான் இப்படித்தான் என தீர்மானித்துவிட்டார்கள். நான் குட்டைப் பாவாடை அணிந்ததாலும் முத்தக் காட்சியில் நடித்ததாலும் இவள் அதற்கு சரிப்பட்டு வருவாள் என்று முடிவுகட்டி என்னிடம் எல்லை மீறத் தொடங்கினார்கள்.

"சில கதாநாயகர்கள் என்னிடம் வந்து, திரையில் என்னுடன் நெருக்கமாக இருக்கிறாயே, வெளியே தனியாக ஏன் நெருக்கமாக இருக்க முடியாது என்று கேட்பார்கள். சில இயக்குநர்களோ என்னைத் தொலைபேசியில் அழைத்து அதிகாலை 3 மணிக்கு 'என்னிடம் வா' என்று அழைப்பார்கள். நான் மறுத்ததால் பல படங்களை இழந்திருக்கிறேன். இது சமூகத்தின் பிரதிபலிப்புதான். நமது நாட்டில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைதான்.

"நான் மிகுந்த தன்னம்பிக்கை கொண்டவள். என்னால் சமரசம் செய்துகொள்ள முடியாது. நிறைய பெருமிதமும் சுயகௌரவமும் கொண்டவள் நான். நான் இதைப் பற்றி வெளியே பேச பயந்தேன். நான் கவர்ச்சியாக நடித்ததால்தான் இயக்குநர் இப்படி அழைத்தார் என்று அவர்கள் என் மீது பழி போட்டு விடுவார்கள். பாதிக்கப்பட்டவர்களை பழி போடும் இந்த மனநிலை நமது சமூகத்தில் இருக்கிறது. அதனால் அமைதியாக இருந்தேன்.

"'மீ டூ' இயக்கம் பெண்களுக்கு அவசியமானது. பல பெண்கள் 'மீ டூ'வில் பாலியல் தொல்லைகளை வெளிப்படுத்தி உள்ளனர். இதனால் ஓரளவு பாதுகாப்பு கிடைத்து உள்ளது," என்று கூறினார்.

இந்தக் குற்றச்சாட்டு பாலிவுட்டில் பலரையும் கவலையிலும் பயத்திலும் ஆழ்த்தி இருக்கிறது.