கதாபாத்திரமாக மாறுவேன் - நித்யாமேனன்

கதாபாத்திரமாக மாறுவேன் - நித்யாமேனன்

3 mins read
cb973bb5-4882-4669-8328-4ee52deaa2ab
'மங்கள்' படத்தின் மூலம் இந்தியில் கால்பதித்துள்ளார் நித்யாமேனன். -

'மங்கள்' படத்தின் மூலம் இந்தியில் கால்பதித்துள்ளார் நித்யாமேனன். அதற்காக தென்னிந்திய மொழிப் படங்களை அவர் மறந்துவிடவில்லை.

தமிழில் 'தி அயர்ன் லேடி'யில் நடிக்கிறார். மலையாளத்தில் அவர் நடித்துள்ள 'கொளம்பி' வெளியீடு காண்கிறது.

"இந்தித் திரையுலகம் நான் நினைத்ததைவிட வேறு மாதிரியாக உள்ளது. அங்குள்ள ஒவ்வொருவரும் என் மீதான அன்பை வெளிப்படுத்தினர். இந்தியில் நடித்தது நல்ல அனுபவமாக அமைந்தது," என்கிறார் நித்யா.

'தி அயர்ன் லேடி' படம் குறித்து அறிவிக்கப்பட்டு சில மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், மேற்கொண்டு எந்தத் தகவலும் இல்லை.

இதையடுத்து அப்படம் கைவிடப்பட்டதா எனும் கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இப்படத்துக்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக நித்யா கூறுகிறார்.

"இது காலஞ்சென்ற தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் படம்.

"எனவே ஒவ்வொரு சிறு விஷயத்திலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. மேம்போக்காக எதையும் செய்ய இயலாது.

"இயக்குநர் பிரியதர்ஷினி இந்தப் படம் ஏற்படுத்தி உள்ள எதிர்பார்ப்புகளையும் பரபரப்பையும் மட்டும் பயன்படுத்திக்கொள்ள விரும்பவில்லை.

"மாறாக, இப்படம் தொடர்பான அனைத்து விஷயங்களிலும் நியாயத்துடன் செயல்பட விரும்புகிறார். எனவே உடனடியாக படத்தைத் தொடங்கி எந்த சமரசத்திற்கும் உட்பட விரும்பவில்லை," என்கிறார் நித்யா மேனன்.

'தி அயர்ன் லேடி' படத்திற்கான படப்பிடிப்பைத் துவங்கும் முன்பு நிறைய ஏற்பாடுகளை, முன் தயாரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாம்.

அதற்கு நிறைய காலம் தேவைப்படுவதால் படப்பிடிப்பை உடனடியாக துவங்க முடியவில்லை என்கிறார் நித்யா.

ஏற்றுக்கொண்ட கதாபாத்திரமாகவே மாறிவிடுகிறார் என்று நித்யாவை பெரும்பாலானோர் பாராட்டுகின்றனர். உண்மையில் தனது கதாபாத்திரங்களுக்காக பயிற்சி, ஒத்திகை என்று எதையும் அவர் மேற்கொள்வது இல்லை.

"ஒருவரது வாழ்க்கை வரலாறு, மருத்துவர் போன்ற நிபுணத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் என்றால் சில தகவல்களை சேகரித்துக்கொள்வேன். மற்றபடி, பெரும்பாலான தருணங்களில் பயிற்சி இல்லாமல்தான் நடித்திருக்கிறேன்.

"திரையுலகைப் பொறுத்தவரை எல்லாமே கடைசி நேரம் வரை இழுத்தடிக்கப்படும். இறுதி செய்யப்பட்ட கதை, திரைக்கதை, வசனங்களை கடைசி நேரத்தில் தான் நம்மிடம் கொடுப்பார்கள்.

"பொதுவாக நான் எதையும் சீக்கிரமாகக் கற்றுக் கொள்வேன். இது எனது திரையுலக நண்பர்களுக்கு நன்கு தெரியும். அதனால் சில இயக்குநர்கள் படப்பிடிப்பு துவங்கும் நாள் காலையில்தான் வசனங்களைக் கொடுப்பார்கள். இதற்காக நான் கோபப்படுவது இல்லை," என்று சிரித்தபடி சொல்கிறார் நித்யா.

ஒரு படத்துக்கான கதையைக் கேட்டு முடித்த அந்த நொடியே மனதில் அதைப் பதிய வைத்துக் கொள்வாராம். அதன் பிறகு அந்தக் கதை, தனக்கான கதாபாத்திரம் குறித்து எந்நேரமும் யோசித்து, மனதுக்குள் அதை மெருகேற்றுவாராம். ஒருவேளை அந்தப் படத்தில் நடிக்கவில்லை என்றாலும், இந்த மெருகேற்றும் படலம் நடக்குமாம்.

"எனக்கான கதாபாத்திரம் பிடித்துப்போனால் நான் அதுவாகவே மாறிவிடுவேன். அந்தக் கதாபாத்திரமாக வாழ்வதை விரும்புவேன். இதில் ஓர் அலாதியான சுகம் இருக்கிறது. இப்படிச் செய்வதால் நடிப்பது சுலபமாகும்.

"எந்தவொரு கதாபாத்திரத்திலும் என்னைப் பொருத்திக் கொள்வதற்கு இந்தப் பழக்கம் கைகொடுக்கிறது. அந்த வகையில் இயக்குநரின் வேலையும் எளிதாகும். ரசிகர்களும் நம்மை அந்தக் கதாபாத்திரமாகவே ஏற்றுக் கொள்கிறார்கள்.

"என்னிடம் கதை சொல்லும்போது இயக்குநர் சில வசனங்களைக் கூறியிருந்தால் அதைக் கடைசிவரை மறக்கமாட்டேன். இது என்னிடம் நானே கண்டுகொண்ட திறமை. படப்பிடிப்பின்போது அந்த வசனங்களில் ஒன்றிரண்டு வார்த்தைகள் குறைந்தாலும் கண்டுபிடித்து விடுவேன். இது பல இயக்குநர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

"எப்படி உங்களால் நினைவில் வைத்திருக்க முடிந் தது என்று கேட்பார்கள். இப்படியொரு திறமை வாய்த்தது எனது அதிர்ஷ்டம்," என்கிறார் நித்யா.