'நல்ல மாற்றம் வேண்டும்'

'நல்ல மாற்றம் வேண்டும்'

3 mins read
8633f4f1-69d9-4f11-8494-e0ff5e4397fa
-

ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடித்து அலுத்துப் போய்விட்டதாகச் சொல்கிறார் மஞ்சிமா மோகன். இனி, வித்தியாசமான வேடங்களில் கவனம் செலுத்துவது என முடிவு செய்துள்ளார்.

அவரது இந்த எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்யும் வகையில் ஒரு வாய்ப்பு தேடி வந்திருக்கிறதாம். விஜய் சேதுபதி நடிக்கும் 'துக்ளக் தர்பார்' படத்தில் மஞ்சிமாவையும் ஒப்பந்தம் செய்துள்ளனர். இதுவரை ஏற்றிராத ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.

"நடிக்க வந்த புதிதில் பக்கத்து வீட்டுப் பெண்ணைப் போன்று தோற்றமளிப்பதாக பலரும் கூறினர். அந்தக் காரணத்தினால்தான் பல பட வாய்ப்புகளும் தேடிவந்தன.

"ஆனால், இன்னமும் எத்தனை நாட்களுக்குத்தான் இந்தப் பக்கத்து வீட்டுப் பெண் தோற்றத்திலலேயே நடித்துக் கொண்டிருக்க முடியும். அதனால்தான் ஒரு மாற்றம் வேண்டும் என விரும்புகிறேன்," என்கிறார் மஞ்சிமா.

அண்மைக் காலமாக தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குநர்களிடம் தமது இந்த முடிவைத் தவறாமல் தெரிவிக்கிறாராம். தனது கதாபாத்திரத்தின் தன்மையை மாற்றுமாறும் கேட்டுக் கொள்கிறாராம்.

"எல்லாமே குறுகிய காலத்தில் நடந்தேறியது போல் இருக்கிறது. எனவேதான் என்னை அணுகும் படக்குழுவினரிடம் சிலவற்றை வெளிப்படையாக விவாதிக்கிறேன். இத்தகைய விவாதங்கள்தான் நல்ல தீர்வைத் தரும் என நம்புகிறேன்," என்கிறார் மஞ்சிமா.

திரையில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் இவர் சுட்டிப் பெண்தானாம். சிறு வயது முதல் இவ்வாறு இருப்பதையே விரும்புவாராம்.

"என் முகத்தில் ஒருவித சுட்டித்தனம் தென்படுவதாக பலரும் கூறக் கேட்டிருக்கிறேன். எப்போதுமே வளவளவென பேசிக்கொண்டும் அங்குமிங்குமாக ஓடியாடியபடியும் இருப்பது என் வழக்கம்.

"உங்களுக்குள் இருக்கும் குழந்தைத் தனத்தை மறந்துவிடாதீர்கள் என்று கூறுவார்கள். அது உண்மை என உறுதியாக நம்புகிறேன். எப்போதும் முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு சீரியஸாக இருப்பதால் பலன் இல்லை. புன்னகையுடன் கூடிய முகமே நல்ல நண்பர்களைத் தேடித்தரும்," என்று சொல்லும் மஞ்சிமா, விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிப்பது உற்சாகம் அளிப்பதாகச் சொல்கிறார்.

தாம் எதிர்பார்த்த கதாபாத்திரம் கிடைத்திருப்பதும் இவரை மகிழ வைத்துள்ளது. சேதுபதியுடன் நடிப்பது சவாலாக இருக்கும் எனக் கருதுகிறாராம்.

"'துக்ளக் தர்பார்' படத்தின் கதையை இயக்குநர் விவரித்த விதம் எனக்குப் பிடித்திருந்தது. நடிக்க வந்த நாள் முதல் இப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.

"பெரிய காத்திருப்புக்குப் பிறகு கிடைத்த வேடம் இது. அதனால் சிறப்பான நடிப்பை வழங்க விரும்புகிறேன். இந்தப் படத்தில் பல பெரிய நட்சத்திரங்கள் உள்ளனர். அனைவரையும் கடந்து பெயரெடுப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.

"குறிப்பாக விஜய் சேதுபதி எவ்வளவு திறமை வாய்ந்தவர் என்பது எல்லோருக்கும் தெரியும். அதனால்தான் அவருடன் இணைந்து நடிப்பது சவாலானது என்று கூறுகிறேன். இந்தப்

படம் எனக்கு நல்ல அனுபவங்களைத் தரும் என்ற

நம்பிக்கை உள்ளது," என்கிறார் மஞ்சிமா.

இந்தப் படம் வெளியான பிறகு தமிழில் தாம் எதிர்பார்க்கும் நல்ல வேடங்கள் அமையும் என்று நம்புவதாக குறிப்பிடுபவர், பெற்றோரின் ஆதரவால் தான் திரையுலகில் நீடிக்க முடிகிறது என்கிறார்.

"என்னுடைய படத் தேர்வுகள் குறித்து பெற்றோர் எந்த கருத்தும் தெரிவிக்க மாட்டார்கள். எனக்குப் பிடித்தமான கதைகளையே தேர்வு செய்கிறேன். அதே சமயம் பெண் குழந்தையின் பெற்றோர் என்ற வகையில் எனக்கு நல்ல அறிவுரைகளைக் கூறுவதுண்டு. குறிப்பாக நாம் சந்திக்கும் புது நபர்களை எவ்வாறு எடை போடவேண்டும் என்பதை மிகத் தெளிவாகக் கற்றுக் கொடுத்துள்ளனர்," என்கிறார் மஞ்சிமா மோகன்.