நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா ‘வடசென்னை’ படத்துக்கு பிறகு புதியபடங்களில் நடிக்கவில்லை. சமூக வலைத்தளங்களிலும் அவரது பதிவுகளைக் காண முடியவில்லை.
ஆண்டுக்கு 4, 5 படங்களில் நடித்துக்கொண்டிருந்த நிலையில், கடந்த ஆண்டு ‘விஸ்வரூபம்-2’, ‘வடசென்னை’ ஆகிய இரு படங்கள் மட்டுமே அவரது நடிப்பில் வெளிவந்தன.
சினிமாவை விட்டு விலகிவிட்டாேரா என்று யோசிக்கும் அளவுக்கு சிறிது காலம் அவரைப் பற்றிய செய்திகள் ஏதும் வெளிவராமல் இருந்தன.
இந்நிலையில், நடிப்புக்கு சிறிய இடைவெளி கொடுத்திருந்ததற்கான காரணத்தை விளக்கமாக தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் அழகிய புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார் ஆண்ட்ரியா.
“சமூக ஊடகங்கள், பொது வாழ்க்கையிலிருந்து எனக்கு மிகவும் தேவைப்பட்ட இடைவெளிக்குப் பிறகு நான் திரும்பி வந்துள்ளேன்.
“எனது மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை என்னை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் உணர்வுபூர்வமாகவும் பாதித்திருந்தது.
“எனவே சிறிதுகாலம் அனைத்திலும் இருந்து விடுபட்டு, முதன்முறையாக ஓர் ஆயுர்வேத மருத்துவமுறையை முயற்சிக்க முடிவு செய்தேன்.
“என்னைப் போன்ற ஒரு காஃபி போதைக்கு அடிமையானவர்களுக்கு இது எளிதானது அல்ல.
“ஆனால் ஒரு கோப்பை மூலிகைத் தேநீரும் யோகாவும் ஒருநாளின் மிக நல்ல தொடக்கமாகும்.
“வீரேச்சனா எனும் ஆயுர்வேத மருத்துவ முறை பலவீனமான இதயம் உள்ளவர்களுக்கானது அல்ல, நான் அதிலிருந்து வெளியேற விரும்பிய தருணங்கள் உண்டு. ஆனால் அதையும் கடந்து, மருத்துவர்கள் பரிந்துரைத்த முறைகளை மிகச் சரியாகப் பின்பற்றினேன். தற்போது புதிய பெண்ணாக என்னை நான் உணர்கிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
டாக்டர் பிரகாஷ் கல்மேட் தலைமையிலான KARE நிலையத்தில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் பெங்களூரில் கவிதை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இவர், சில கவிதைகளை வாசித்தார். அவற்றில் சில சோக கீதங்களாக இருந்ததற்கான காரணத்தைக் கேட்டபோது, “திருமணமான ஒருவருடன் நான் தொடர்பு வைத்திருந்த இருண்ட காலத்தின் துயரத்தை அடக்க முடியாமல் எழுதியவை அவை,” எனக் கூறினார்.
தாம் எழுதிய கவிதைத் தொகுப்புக்கு ‘முறிந்த சிறகுகள்’ என பெயர் வைத்துள்ளார்.
ஆங்கிலோ இந்திய சமூகத்தை சேர்ந்த இவர், தன் சமூகத்தைப் பற்றிய வரலாற்றுப் புத்தகம் ஒன்றையும் எழுதப் போகிறாராம்.