இந்தியாவின் பிரபல பன்மொழி நடிகை மறைந்த ஸ்ரீதேவியின் நினைவாக மெழுகுச் சிலை ஒன்று வெளியிடப்படும் என்று ‘மேடம் டுஸ்ஸாட்ஸ் சிங்கப்பூர்’ அறிவித்துள்ளது. ஸ்ரீதேவியின் 56ஆவது பிறந்தநாளான இன்று இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
இருபது கலைஞர்களால் வடிவமைக்கப்பட்ட அந்தச் சிலையைச் செய்து முடிக்க கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் ஆனதாக ‘மேடம் டுஸ்ஸாட்ஸ் சிங்கப்பூர்’ தனது செய்தியாளர் அறிக்கையில் கூறியது.
இந்தச் சிலையை செப்டம்பரின் முற்பகுதியில் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரும் அவரது இரண்டு மகள்களும் வெளியிடுவர். தமது மனைவியை ‘மேடம் டுஸ்ஸாட்ஸ்’ இப்படி கௌரவப்படுத்தியது குறித்து நெகிழ்ச்சியடைவதாக போனி கபூர் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து ‘மேடம் டுஸ்ஸாட்ஸ் சிங்கப்பூர்’-ரின் பொது நிர்வாகி அலெக்ஸ் வார்ட் கூறுகையில், "ஸ்ரீதேவி இந்தியத் திரையுலகில் ஒரு சின்னம். ரசிகர்களின் திரை அனுபவத்திற்காக நாங்கள் வகுத்துள்ள இடம் அவர் இன்றி முழுமை பெறாது. அவரது புகழைக் கட்டிக்காக்கும் முயற்சியில் நாங்களும் பங்குபெற்றது குறித்து பெருமையடைகிறோம். இந்தப் பிரத்தியேகச் சிலையை நாங்கள் ஸ்ரீதேவியின் குடும்பத்தாருடன் வெளியிடவுள்ளோம்," என்றார்.