‘பாகுபலி’ புகழ் பிரபாஸ் தற்பொழுது நடித்து வரும் படம் ‘சாஹோ’. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் ஷ்ரத்தா கபூர் தன்னுடைய முதல் படத்திலேயே ரூ.7 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறார் என்ற செய்தி வெளியாகி உள்ளது. தென்னிந்திய திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகைகளை பின்னுக்குத்தள்ளி தற்பொழுது முன்னணியில் இருக்கிறார் ஷ்ரத்தா கபூர்.
பிரபாஸ்-ஷ்ரத்தா கபூர் ஜோடியாக நடித்துள்ள ‘சாஹோ’ படம் இந்த மாத இறுதியில் வெளியாகிறது. இந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் இந்த படம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டு வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்கு 250 கோடி ருபாய் பட்ஜெட் என முதலில் கூறப்பட்டது. ஆனால் தற்போது ஒரு பேட்டியில் பிரபாஸ் அளித்துள்ள செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
“ஆம் இந்த படத்தின் பட்ஜெட் 350 கோடி ருபாய். உலகத்தின் பல இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. அனைத்தும் இயற்கையாக பல கஷ்டங்களுக்கு இடையே எடுக்கப்பட்டுள்ளது,” என்று கூறியுள்ளார்.
குறிப்பாக அபுதாபியில் படமாக்கப்பட்ட ஒரு பந்தயக் காட்சிக்கு மட்டும் 80 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என முன்பே செய்திகள் வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அனுஷ்கா, திரிஷா, நயன்தாரா, தமன்னா, காஜல் அகர்வால், சமந்தா போன்ற ஒரு சில முன்னணி நடிகைகள் மட்டுமே கோடிகளில் சம்பளம் வாங்குகின்றனர். அவர்களும் 3 முதல் ரூ.4 கோடிக்குமேல் வாங்கியதாக தெரியவில்லை. இவர்களுக்கெல்லாம் அதிர்ச்சி அளிக்கும் வகையில் முதல் தென்னிந்திய படத்திலேயே அதிக சம்பளம் வாங்கி இருக்கிறார் ஷ்ரத்தா கபூர்.
பிரபாஸ் நடிக்கும் ‘சாஹோ’ படத்தின் மூலம் தமிழ், தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் ஷ்ரத்தா. இதன் படப்பிடிப்பின் பெரும்பகுதி முடிந்து இறுதிகட்ட பணி நடக்கிறது. வழக்கமாக இந்தி படங்களில் நடிக்க ரூ.2 கோடி சம்பளம் வாங்கும் ஷ்ரத்தா, ‘சாஹோ’ படத்துக்காக ரூ.7 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறார்.
இந்த தகவல் கேட்டு முதன்மையான நடிகைகள் அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர். அதேபோல் இப்படத்தில் நடித்திருக்கும் பிரபாஸும் முன்னணி நாயகன்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
இவர் சம்பளமாக வாங்கிக்கொள்ளாமல் பட விற்பனையில் பங்கு என்ற வகையில் வெளியீட்டிற்கு முன்பாக ரூ.100 கோடியை தன் பங்காக பெறுகிறாராம்.