இப்போதுதான் கல்லூரிப் படிப்பை முடித்தவர்போல் காட்சி தருகிறார் ரெஜினா.
நடிக்க வந்து சில ஆண்டுகள் ஆகிவிட்டாலும் இன்னும் அதே இளமைத் துள்ளல், சுறுசுறுப்பு என்று உற்சாகமாக வலம் வருகிறார்.
தமிழில் வாய்ப்பில்லை என்றாலும் ரெஜினாவுக்கு தெலுங்கு தேசம் கைகொடுத்திருக்கிறது.
அங்கு 2 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அதற்காக கோடம்பாக்கம் அவரை ஒரேடியாக புறக்கணித்துவிட்டது என்றோ, அவர் தமிழ்த் திரையுலகை மறந்துவிட்டார் என்றோ முடிவு செய்ய வேண்டாம்.
கைவசம் மூன்று தமிழ்ப் படங்கள் வைத்துள்ளார்.
வெங்கட் பிரபுவின் ‘பார்ட்டி’, சிம்புதேவனின் ‘கசடதபற’, அரவிந்த் சாமியுடன் ‘கள்ளபார்ட்’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.
“இன்னொரு படத்திலும் நடிக்கிறேன். அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும். அப்போது பலரும் புருவம் உயர்த்தி என்னை ஆச்சரியத்துடன் பார்ப்பார்கள்,” என்று புதிர் போடுகிறார் ரெஜினா.
தெலுங்கில் இவர் நடித்துள்ள ‘எவரு’ படம் விரைவில் வெளியாகிறது. இந்தப் படம் தெலுங்கில் தன்னை உச்சத்துக்கு கொண்டு செல்லும் என்று நம்புகிறாராம்.
“என்னை ஓரிடத்தில் கட்டிப்போட முடியாது. அதேபோல் எனக்கு பிடித்த விஷயமாக இருந்தாலும், நீண்ட நாட்கள் அதைச் செய்யமாட்டேன்.
“சினிமாவிலும் இந்தக் கொள்கையைத்தான் பின்பற்றுகிறேன். ஒரு கட்டத்தில் நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை ஆழ்ந்து யோசித்துப் பார்த்தேன்.
“இப்படித்தான் நடிக்க வேண்டும் என்பதற்காக திரையுலகுக்கு வந்தோமா? நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? என்று சுயமாக மதிப்பிட்டேன்.
“அப்போது என்னைச் சுற்றி இருந்தவர்கள் நான் திரையுலகைச் சார்ந்த மற்றவர்களிடம் இருந்து தனித்து தெரிவதாக கூறினர். அது உண்மை என்பதை ஏற்றுக் கொண்டேன்,” என்கிறார் ரெஜினா.
அதிக ஆசை இல்லாதவர், வாய்ப்புகளுக்காக அலையாதவர், ஆக்ரோஷமாகச் செயல்படாதவர் என்பதுதான் பிறர் இவரைப் பற்றி தெரிவித்த கருத்துகளாம்.
“இவை சரிதான் என்றாலும் தொடர்ந்து தனது தனித்துவத்தைக் கடைப்பிடிப்பது, அதன் மூலமாகவே திரையுலகில் நீடித்து நிற்பது எனும் முடிவுக்கு வந்தாராம்.
“இப்போது எது குறித்தும் கவலைப்படுவதில்லை. சில காலமாக தமிழில் நடிக்கா விட்டாலும், ஊடகங்கள் என்னைப் பற்றி செய்திகளை வெளியிட்டன. ரசிகர்களுக்கு என்னை நினைவூட்டிய அதுவே எனக்குப் போதும்,” என்கிறார் ரெஜினா.