இடையில் சில காலம் அண்ணா, தம்பி என்று பாசம் காட்டி வந்த அஜீத், விஜய் ரசிகர்கள் இடையே மீண்டும் சமூக வலைத்தளங்களில் மோதல் துவங்கிவிட்டது.
இந்த முறை அஜீத் ரசிகர்களின் செயல்பாடு குறித்து விஜய் தரப்பு கிண்டலடித்து வருகிறது.
பிரான்சில் நடந்த சம்பவம் ஒன்று தான் விஜய் ரசிகர்களின் வாய்க்கு அவலாக அமைந்திருக்கிறது. அண்மையில் அங்குள்ள பிரபல திரையரங்கு ஒன்றில் அஜீத் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ படம் திரையிடப்பட்டது.
ஏராளமான அஜீத் ரசிகர்கள் படத்தைக் கண்டு ரசித்தனர். குறிப்பிட்ட ஒரு சிறப்புக் காட்சியின் போது ரசிகர்கள் உற்சாக மிகுதியில் திரையின் அருகே சென்று ஆடிப்பாடி உள்ளனர்.
அப்போது சில ரசிகர்கள் திரையில் கை வைத்து தொட்டுக் கும்பிட்டுள்ளனர். இதனால் திரை சேதமடைந்து விட்டதாம்.
கடும் அதிருப்தி அடைந்த திரையரங்க நிர்வாகம் ரசிகர்களைக் கண்டித்துள்ளது. இந்திய மதிப்பில் ஐந்தரை லட்சம் ரூபாய் நஷ்ட ஈடும் கோரியுள்ளது. சிறப்புக் காட்சியை ஏற்பாடு செய்த ரசிகர்கள் அத்தொகையை செலுத்த ஒப்புக்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை அடுத்து இனி தமிழ்த் திரைப்படங்களைத் திரையிடுவதில்லை என்று அந்த திரையரங்க நிர்வாகம் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
விஷயம் இத்தோடு முடிந்துவிட்ட நிலையில், விஜய் ரசிகர்கள் சிலர் சமூக வலைத்தளங்களில் இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டு அஜீத் ரசிகர்களைப் பலவிதமாக தொடர்ந்து கிண்டல் செய்து வருகின்றனர்.
பதிலுக்கு அஜீத் ரசிகர்களும் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருவதைப் பார்க்க முடிகிறது.