மறக்க முடியாத படப்பிடிப்பு அனுபவம் நல்கிய 'மாஃபியா'

மறக்க முடியாத படப்பிடிப்பு அனுபவம் நல்கிய 'மாஃபியா'

2 mins read
8e9229f0-e2af-432d-a7cd-24c078b1eae9
பிரியா பவானி சங்கர்.  -

'மாஃபியா' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், 'இந்தியன்-2' படத்தில் கவனம் செலுத்தத் துவங்கியுள்ளார் பிரியா பவானி சங்கர்.

'மாஃபியா' படம் மிக வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்டிருப்பதாகவும் தனது சமூக வலைத்தளப் பதிவு ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிக்கும் படம் 'மாஃபியா'. லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அண்மையில்தான் இந்தப் படத்தின் படப்பிடிப்பைத் துவங்கினர்.

ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்க இருப்பதாக இயக்குநர் கார்த்திக் நரேன் படக்குழுவிடம் தெரிவித்தி ருந்தாராம்.

அவ்வளவு சுலபத்தில் இது சாத்தியமாகுமா என்று பிரியாவுக்குத் தொடக்கத்தில் சந்தேகம் இருந்த தாம். ஆனால், சுறுசுறுப்புத் திலகமாகச் செயல்பட்டு திட்டமிட்டபடியே நேற்று முன்தினம் படப்பிடிப்பை முடித்திருக்கி றார் கார்த்திக் நரேன்.

அவரது வேகமான செயல்பாடு படக்குழு வினரை ஆச்சரியத்தில் மூழ்க டித்துள்ளது. தனது காட்சிகள் படமாக்கப்பட்ட விதமும் அக்காட்சிகளைக் கார்த்திக் அமைத்திருக்கும் விதமும் மனநிறைவைத் தந்திருப்பதாகச் சொல்கிறார் பிரியா.

"மகிழ்ச்சியான, உற்சாகமான படப்பிடிப்பாக அமைந்திருந்தது. கார்த்திக் நரேனின் 3 பவுண்ட் கொண்ட விசேஷ மூளையின் திறன் குறித்து நாங்கள் இன்னும் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கிறோம்," என்று பிரியா தனது சமூக வலைத்தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.

நாயகன் அருண் விஜய் கனிவு, அர்ப்பணிப்பு, விடாமுயற்சி, திறமை, நேர்மறை எண்ணம் என அனைத்தும் கொண்ட ஆச்சரியமான நபர் என்று குறிப்பிட்டுள்ள அவர், அருண் தமக்கு எதிர்பாராமல் கிடைத்த நண்பர் எனத் தெரிவித்துள்ளார்.

'மாஃபியா' குழுவில் இருந்த அனைவருமே நடந்து முடிந்த படப்பிடிப்பை மறக்க முடியாததாக சிறப்பான அனுபவமாக மாற்றி உள்ளனர்.

"இப்படிப் பல காரணங்களுக்காக இந்தப் படமும், படப்பிடிப்பும் என் இதயத்துக்கு மிக நெருக்கமானதாக நிலைத்திருக்கும். உங்கள் அனைவருக்கும் என் அன்பு," என்று குறிப்பிட்டுள்ளார் பிரியா பவானி சங்கர்.

மேலும், பின்குறிப்பு என்று குறிப்பிட்டு மனதில் இவ்வளவு மகிழ்ச்சி இருந்தாலும் இது சீரியசான படம் என்பதைச் சொல்லிக் கொள்கிறேன் என்றும் பிரியா மேலும் தெரிவித்துள்ளார்.

'மாஃபியா'வுக்கான வேலையை முடித்து விட்டதால் 'இந்தியன்-2' படத்தில் கவனம் செலுத்தத் துவங்கி உள்ளாராம். சங்கர் இயக்கத்தில் நடிப்பது மேலும் ஓர் இனிய அனுபவத்தைத் தரும் என்றும் நம்புகிறாராம்.

'இந்தியன்-2' பட வேலைகள் முடிந்த பிறகுதான் மற்ற படங்கள், ஓய்வு, விடுமுறை குறித்தெல்லாம் யோசிக்கப் போவதாகச் சொல்கிறார்.

கொசுறு: அண்மையில் சம்பளத்தை உயர்த்தியுள்ளார் பிரியா.