அறிமுக இயக்குநர் முனுசாமி இயக்கியுள்ள படம் ‘ரீல்’. இதில் நாயகனாக அறிமுகமாகியுள்ளார் கேரளாவைச் சேர்ந்த உதயராஜ்.
‘கெளபாய்’ என்ற மலையாளப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவருக்கு, அதன்பிறகு சொல்லிக் கொள்ளும்படி எந்த வாய்ப்பும் அமையவில்லை. எனவே நல்ல கதைக்காக காத்துக் கிடந்தாராம். அப்போது தான் ‘ரீல்’ கதையை கேட்க நேர்ந்திருக்கிறது.
“தமிழ்ச் சினிமாவில் அறிமுகமாக வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவு. ‘கெளபாய்’ படத்தில் இணை இயக்குநராகப் பணிபுரிந்த முனுசாமிதான் ‘ரீல்’ படத்தின் இயக்குநர். அவர்தான் இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். அவருடைய படத்தில் நடிப்பேன் என்று நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. காரணம், அவர் பெரிய நாயகனை வைத்து படம் எடுக்கப்போவதாக என்னிடம் சொல்லி இருந்தார்,” என்று கண்களில் வியப்பு மின்ன பேசுகிறார் உதயராஜ்.
குறும்படங்கள்தான் தமக்கு திரைத்துறையில் ஒரு முகவரியைத் தேடித் தந்ததாகக் குறிப்பிடுபவர், நடிப்புக்கான தேர்வை வெற்றிகரமாகக் கடந்த பிறகே இந்தப் புது வாய்ப்பைப் பெற்றதாகச் சொல்கிறார்.
“இயக்குநரின் வழிகாட்டுதலின்படி ‘ரீல்’ நடிப்புத் தேர்வில் பங்கேற்றேன். கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து படத்தைத் தயாரித்துள்ள நிறுவனத்தார் என்னை நாயகனாகத் தேர்வு செய்துள்ளதாக சொன்னதும் கிண்டல் செய்கிறார் கள் என்று நினைத்தேன்.
“மீண்டும் அலுவலகம் சென்றிருந்தபோது, ஒரு நகைச்சுவை காட்சி, குடும்ப உணர்வுகளை வெளிப்படுத்தும் மற்றொரு காட்சியில் நடிக்கச் சொன்னார்கள். அதன் பிறகுதான் என்னை தேர்வு செய்தனர்,” என்கிறார் உதயராஜ்.
‘ரீல்’ பெண்களுக்கு வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பு குறித்துப் பேசும் படமாம். வாழ்க்கையில் தன்னந்தனியாகப் போராடும் ஒரு பெண்ணைச் சுற்றித்தான் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
“முதல் படத்திலேயே வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்துள்ளது. சின்ன திருட்டு, சமூக சேவை, கடத்தல், காதல் என்று சென்று கொண்டிருக்கும் கதாபாத்திரத்தில் நடிப்புக்கான தீனி நிறைய இருந்தது. முதல் பட நாயகனுக்கு அவ்வளவு சீக்கிரத்தில் கிடைக்காத கதை இது.
“இந்தப் படத்தில் புதுமுகமான நான் நாயகனாக நடிப்பதற்கு இன்னொரு காரணமும் உண்டு. இயக்குநர் முனுசாமி அதுகுறித்து விவரித்தபோது நெகிழ்ந்து போனேன்.
“இப்படத்தின் தயாரிப்பாளர் கேப்டன் கருடு கோடம்பாக்கத்தில் பல ஆண்டுகளாக நாயகனாக, வில்லனாக நடிக்க முயற்சி செய்தவராம். வாய்ப்பு கிடைக்காதது அவருக்குள் பெரிய வலியைக் கொடுத்திருந்ததாம்.
“இன்னொருவருக்கு அந்த வலி வரக்கூடாது என்பதற்காகவே இந்தப் படத்தில் புதுமுகத்துக்குத்தான் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று தீர்மானித்திருந்தாராம். அவரும் படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்,” என்கிறார் உதயராஜ். படத்தின் நாயகி அவந்திகாவும் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளதாகப் பாராட்டும் இயக்குநர், முத்தக் காட்சியும் இருப்பதாக கிசுகிசுக்கிறார். இந்தக் காட்சியை ஒரே டேக்கில் படமாக்கி விட்டனராம்.