பெண்களுக்கு அழகைக் கொடுப்பது தன்னம்பிக்கை. எனக்கு அது நிறைய இருக்கிறது என்று தன்னம்பிக்கையுடன் சொல்கிறார் சாய் பல்லவி.
"நான் நடித்த முதல் படம் 'பிரேமம்'. அந்தப் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டேன். ஒவ்வொரு படத்தில் நடிக்கும்போதும் எனது கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மனதை எப்படி கொள்ளை கொள்ளும் என்றுதான் யோசிப்பேன். படத்தில் நடித்து திரைக்கு வந்த பிறகு வெற்றி பெற்றதா? அல்லது தோல்வி அடைந்ததா? என்று சிந்தித்துக்கொண்டு இருக்கமாட்டேன். படங்களில் நடிக்கும் முன்பு கதாபாத்திரங்கள் ரசிகர்களுக்குப் பிடிக்குமா? பிடிக்காதா என்றுதான் ஆலோசிப்பேன்.
"நடிக்க ஆரம்பித்த பிறகு மானசீகமான உறவை என் வேடத்துடன் ஏற்படுத்திக்கொள்வேன். அதுதான் எனது நடிப்பை பிரமாதமாக மாற்றி விடுகிறது. "இயக்குனர் கதை சொல்லும்போதே நான் அந்த படத்தில் இருக்கிறேனா? இல்லையா? என்பது புரிந்துவிடும். இயக்குனர் சொல்லும் கதை, கதாபாத்திரம் எனக்கு பிடித்து இருந்தால் போதும் உடனே சம்மதித்துவிடுவேன்.
"மறுகணமே அந்த கதாபாத்திரத்தை நேசித்து அவற்றோடு ஒன்றிவிடுவேன். தன்னம்பிக்கையோடு படப்பிடிப்பு முடியும்வரை அந்த கதாபாத்திரத்தோடு பயணம் செய்து கொண்டு இருப்பேன். அதனால்தான் இயல்பாக நடிப்பதாக என்னைப் பாராட்டுகிறார்கள்.
"பெண்கள் தங்கள் மீது முதலில் தன்னம்பிக்கை வைக்கவேண்டும். பின் தைரியமாகச் செயல்படவேண்டும்," என்றார் சாய் பல்லவி. இவர் தற்பொழுது தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

