நாளுக்கு நாள் சம்பளத்தை உயர்த்திக்கொண்டே செல்லும் நடிகர்களின் மனப்போக்கால்தான் படத் தயாரிப்பாளர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது. இந்தப் போக்கு மாறவேண்டும்.
தயாரிப்பாளர் சங்கம் இதுகுறித்து ஒரு முடிவெடுத்து நடிகர்களின் சம்பளத்தை ஒரு கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என தயாரிப்பாளர் சங்க கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம் வலியுறுத்தி உள்ளார்.
பிரபுராஜா இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘படைப்பாளன்’. இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
இந்த விழாவில் ஜாக்குவார் தங்கம் பேசியபோது, “ஒரு படம் வெற்றிபெற்றால் அந்தப் படத்தை எடுக்க பணத்தை முதலீடு செய்யும் தயாரிப்பாளர்கள் மட்டுமின்றி இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட அனைவருமே மகிழ்ச்சியில் திளைப்பார்கள்.
“அதேவேளையில் படம் தோல்வி அடைந்தால் தயாரிப்பாளர்கள் தங்கள் கையை சுட்டுக்கொல்லும் நிலைமை உள்ளது. அடுத்தடுத்து படம் எடுக்கவே அவர்கள் யோசிக்கின்றனர்.
“நடிகர்கள் தங்கள் சம்பளத்தை குறைத்துக்கொள்வதே இப்பிரச்சினைக்கு தீர்வாக இருக்கும்.
“தயாரிப்பாளர் சங்கம் இதற்கு ஒரு முடிவு காணவேண்டும். அப்படி நடிகர்கள் இதற்கு ஒத்துவராவிட்டால் வேறு நடிகரை வைத்து படத்தை எடுங்கள். இங்கு எல்லா நடிகர்களும் வானத்தில் இருந்தா குதித்தார்கள்? தமிழர்களுக்கு மட்டும் வேலை கொடுங்கள்,” என்றார்.
தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவரும் எம்பியுமான திருநாவுக்கரசர் பேசுகையில், “ஒரு திரைப்படம் வெற்றிபெறுவதற்கு கதைதான் முக்கியம். கதையே நாயகன். நடிகர்கள் எல்லாம் இரண்டாம்பட்சம்தான்.
“எம்ஜிஆர் நடித்துகூட தோற்ற படங்களும் உண்டு. ஆக கதைதான் எப்போதும் முக்கியம். சினிமா என்பதே பிரசவ வலி மாதிரிதான்.
“பெரிய நடிகர்கள் தங்களின் சம்பளத்தைக் குறைத்தால் சினிமா இன்னும் சுகாதாரமாக இருக்கும். சினிமா பலருக்கு வேலை தரக்கூடிய தொழில்,” என்றார். கூறினார்.