எனது அப்பா, அம்மா தோளில் இருந்தபடி சினிமாவைப் பார்த்து வளர்ந்தவள் நான். நடிப்பு விஷயத்திலும் கதைகளைத் தேர்வு செய்வதிலும் முதிர்ச்சி அடைந்துள்ளேன் என்று கூறும் நடிகை கீர்த்தி சுரேஷ், “எல்லாம் தெரியும் என்ற அகந்தையோ ஆணவமோ என்னிடம் துளியும் இல்லை,” என்று கூறுகிறார்.
இவரது நடிப்பில் கடந்த வருடம் எட்டு படங்கள் திரைக்கு வந்தன.
தற்போது மலையாளத்தில் ‘மரக்காயர்’, தெலுங்கில் ‘மிஸ் இந்தியா’, இந்தியில் ‘மெய்டான்’ ஆகிய படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் அளித்துள்ள பேட்டியில், “தெரிந்த விஷயங்களைப் பற்றி பகிர்ந்து கொள்வதற்கும் தெரியாததைக் கற்றுக்கொள்வதற்கும் என்னிடம் எப்போதுமே ஓர் ஆவல் இருந்துகொண்டே இருக்கும்.
“தேவை இருந்தாலும் இல்லாவிட்டாலும் நமக்கு தெரிந்த வித்தைகள் அனைத்தையும் வெளிப்படுத்த வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.
“திரைத்துறையில் வாய்ப்புகள் கிடைப்பதும் பெரிய விஷயம்தான்.
“ஓய்வாக உட்கார்ந்து இருக்கக் கூடாது என்பதும் ஓய்வில்லாமல் ஏதாவது ஒன்றை செய்துகொண்டே இருக்கவேண்டும் என்பதும் உண்மைதான்.
“அதற்காக நான் இத்தனை படங்களில் நடித்துவிட்டேன் என்று பெருமையாகக் கூறிக்கொள்வதற்காகவும் படத்தின் எண்ணிக்கையை உயர்த்துவதற்காகவும் கிடைத்த பட வாய்ப்புகளை எல்லாம் ஒப்புக் கொண்டு நடிப்பதற்கு பிடிக்காது.
“கற்றது கையளவு, கல்லாதது உலகளவு என்பது நூற்றுக்கு நூறு உண்மை. எங்கு எப்படி நடக்க வேண்டுமோ அப்படி நடப்பேன்.
“சினிமாவில் இயக்குநர் கள் முடிவுதான் இறுதியானது. அவர்கள் எண்ணங்களோடு நாம் பயணம் செய்தால் போதும், எல்லாமே நன்றாக நடக்கும்,” என்கிறார் கீர்த்தி்.
கீர்த்தி நடிப்பில் உருவாகும் ‘மிஸ் இந்தியா’ படத்தின் முன்னோட்டக் காட்சியைப் படக்குழு வெளியிட்டுள்ளது. தனது உடல் எடையைக் குறைத்து புதிய தோற்றத்தில் காணப்படும் கீர்த்தி சுரேஷின் 20வது படமாக இப்படம் உருவாகிறது.
தமிழில் விஜய், சூர்யா, சிவகார்த்தி கேயன், விஷால் உள்ளிட்ட முன்னணி நாயகர்களுக்கு ஜோடியாக நடித்த நடிகை கீர்த்தி சுரேஷ் தெலுங்கிலும் பரபரப்பாக நடித்து வருகிறார்.
தெலுங்கில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ‘மகாநதி’ படத்துக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. இந்தப் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் அவர் பெற்றார்.
தெலுங்குப் படங்களைத் தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில் உருவாகும் ‘மைதான்’ பாலிவுட் படத்தில் அஜய் தேவ்கன் ஜோடியாகவும் நடித்து வருகிறார். நாயகியை மையப்படுத்தி உருவாகும் படத்தில் குடும்பப் பெண்ணாகவும் நவீனப் பெண்ணா கவும் கீர்த்தி் தோன்று கிறார்.