பொதுவாக முன்னணி நடிகர், நடிகைகள் தங்களது படவாய்ப்புகள் அடுத்தடுத்து குவிய குவிய தாங்கள் பெறும் சம்பளத்தையும் உயர்த்திக்கொண்டே செல்வர். இவர்களில் விதிவிலக்காக விளங்கும் காஜல் அகர்வால் (படம்) தனது சம்பளத்தைக் கோடிகளில் இருந்து லட்சங்களுக்கு குறைத்துள்ளார்.
இதற்கு முக்கிய காரணமாக அவர் கூறும் விளக்கமும் நியாயமானதாகவே தோன்றுகிறது.
முதலில் படங்களில் நமது திறமையை நிரூபித்து வலுவாக காலூன்றி நின்றபின் சம்பளத்தை உயர்த்துவதே சரியாக இருக்கும் என்று அவர் கூறுகிறார்.
காஜல் அகர்வால் தென்னிந்திய படங்களில் குறிப்பாக தமிழ், தெலுங்கு படங்களில் சுமார் ஒன்றரை முதல் ஒன்றே முக்கால் கோடிவரை சம்பளம் கேட்கிறார். இதர செலவுகளையும் சேர்த்து அவரது சம்பளம் 2 கோடியைத் தொடுகிறது.
தென்னிந்திய மொழிப் படங்களில் முன்னணி நாயகிகளில் ஒருவராகவும் முன்னணி நாயகன்களுக்கு ேஜாடி போட பொருத்தமானவர் என்ற பேரும் புகழும் இருப்பதால் அவரது சம்பளம் கோடிகளில் இருக்கிறது.
அதேநேரம் இந்தியில் காஜல் அகர்வாலுக்கு லட்சங்களில் மட்டுமே சம்பளம் பேசப்படுகிறதாம்.
பாலிவுட் முன்னணி நாயகன்கள் பாலிவுட் நாயகி்களையே தங்களுக்கு ஜோடி போட தேர்வு செய்கின்றனர். அடுத்தகட்ட நாயகன்கள்தான் தென்னிந்திய நடிகைகளுடன் ஜோடிபோட முன்வருகின்றனர்.
தற்போது, ‘மும்பை சாகா’ படத்தில் காஜல் அகர்வால் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இதில் ஜான் ஆப்ரகாம் நாயகனாக நடிக்க, இப்படத்துக்கு காஜலுக்கு ரூ.30 லட்சம் மட்டுமே சம்பளம் பேசப்பட்டிருக்கிறதாம்.
தென்னிந்தியாவில் காஜலுக்கு மவுசு இருந்தாலும் அதை எல்லாம் பாலிவுட்டில் கணக்கில் கொள்ளமுடியாது என்று அங்குள்ள தயாரிப்பாளர்கள் எண்ணுவதால் லட்சங்களில் மட்டுமே சம்பளம் தர முன்வருகின்றனர்.
காஜலும் இந்திப் படங்களில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்க வேண்டும் என்று கடந்த சில வருடங்களாகவே போராடி வருவதால், சம்பளம் குறைவாக இருந்தாலும் படம் வெற்றிபெற்றால் பாலிவுட்டில் தனக்கு நிரந்தர இடம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் குறைந்த சம்பளத்துக்கு நடிக்க ஒப்புக்கொள்கிறாராம்.