என் வாழ்க்கை குறித்து எடுக்கப்படும் புதுப்படத்தில் நடிப்பதற்கு சமந்தாவைவிட தீபிகா படுகோன் பொருத்தமாக இருப்பார் என்று இந்திய பூப்பந்தாட்ட வீராங்கனை பிவி சிந்து தெரிவித்துள்ளார்.
இந்திய சினிமாவில் அண்மை காலமாக பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்களாக எடுக்கப்பட்டு வருகின்றன.
அரசியல், சினிமா, விளையாட்டு, அறிவியல் உள்ளிட்ட துறைகளில் சாதித்தவர்கள் முதல் பிரச்சினைகளைச் சந்தித்த வர்கள் வரை பலரின் வாழ்க்கை கதையையும் படம் எடுப்பதற்கு போட்டி நிலவி வருகிறது.
சந்திரபாபு நாயுடு, சில்க் ஸ்மிதா உள்ளிட்டவர்களின் கதையைப் போன்றே இப்போது மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையையும் படமாக எடுக்க உள்ளனர்.
இந்த வரிசையில் இப்போது பி.வி. சிந்துவும் இணைகிறார்.
பி.வி.சிந்து அண்மையில் சுவிட்சர்லாந்தில் நடந்த அனைத்துலகப் போட்டியில் ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்துடன் தங்கப்பதக்கம் வென்றார்.
சிந்து கதாபாத்திரத்தில் நடிப்பது குறித்து சமந்தாவிடம் படத் தயாரிப்பாளர்கள் கேட்க, அதற்கு அவரும் சம்மதம் சொல்லியுள்ளார்.
இந்நிலையில் தனது வாழ்க்கை வரலாறு படத்தில் சமந்தா நடிப்பதற்கு பி.வி.சிந்து வாழ்த்தும் நன்றியும் தெரிவிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் மாறுபட்ட கருத்துகளைக் கூறி அதிர்ச்சி அளித்துள்ளார் பி.வி. சிந்து.
“என் வாழ்க்கை கதையில் சமந்தாவைவிட தீபிகா படுகோன் நடித்தால் பொருத்தமாக இருப்பார். ஏனெனில் அவரும் ஒரு பூப்பந்தாட்ட வீராங்கனை ஆவார்.
“ஆனாலும் எனது கதாபாத்திரத்தில் யார் நடிக்கவேண்டும் என்பதை படத் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள்தான் முடிவு செய்யவேண்டும். அதில் நான் தலையிடுவதற்கு ஒன்றுமில்லை,” எனத் தெரிவித்துள்ளார்.