பார்த்திபன் இயக்கி, நடித்து, தயாரித்தும் உள்ள படமே ஒத்த செருப்பு 7 . பல நாட்களாகவே ரசிகர்களின் எதிர்பார்ப்பைத் தூண்டிய வண்ணமே இருந்தது. இப்படம் வெளியீடாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
போலிஸ் விசாரணைதான் கதைக்களம். ஓர் அறையில் தான் மொத்த படமும் நடக்கிறது. மாசிலாமணி என்ற பாதுகாவலர் பாத்திரத்தில் அப்பாவித்தனமாக பரிதாபமே நிறைந்த தோரணையில் தொடங்குகிறது பார்த்திபனுடன் படம்.
பக்காவாக சாட்சிகள் கிடையாது, அவனே குற்றத்தை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில்தான் வழக்கு முடியும் என்ற சூழலில் போலிசுக்கு அதிக நெருக்கடியான சூழலே.
கொலை செய்தேன், இல்லை செய்யவில்லை என்று சொல்லாமல் மூன்றாவது கோணத்தில் திரைக்கதையை அமைத்து நடித்துள்ளார் பார்த்திபன். திரையில் தோன்றுவது இவரும் வேறு சில கதாபாத்திரங்களின் குரல்கள் மட்டும்தான்.
உடல்நலம் பாதிக்கப்பட்ட மகன், கோபமான- சாந்தமான போலிஸ், ரோஸி என்கின்ற பெண் போலிஸ், உணர்ச்சிபூர்வமாகப் பேசும் மனைவி, டாக்டர் என அந்த கதாபாத்திரங்களைப் பற்றி கூட நாம் பேசிக்கொண்டே போகலாம் அந்தளவுக்கு நேர்த்தியும் நுணுக்கமும் உள்ளன.
இரண்டு மணி நேரம், பல திருப்பங்கள், நம்மைத் திருப்பிப் போடும் திருப்பங்கள் என அசத்தல் மனோதத்துவ விசாரணைகள், திரில்லர் இப்படம்.
கிளைமாக்ஸ் நெருங்கும் சமயங்களில் பார்த்திபனுக்கு ஏதேனும் ஆகும் பட்சத்தில் அவர் மகனின் நிலை என்னவாகும் என்ற படபடப்பு நமக்கும் வந்து விடுகிறது.
எப்படியாவது இவன் தப்பித்து விடவேண்டும் என சீட் நுனியில் வந்து நம்மை உட்காரவைத்து விடுகிறது இப்படம்.
பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதையும் தாண்டி தன் மன திருப்திக்காக அடிக்கடி படம் இயக்குவது பார்த்திபனின் வழக்கம்.
அவர் இயக்கும் படங்கள் பாராட்டைப் பெறும், ஏன் விருதுகள்கூட தட்டிச் செல்லும் பல நேரங்களில். ஆனால் பணம் மட்டும் படத்துக்கு வசூல் ஆகாது. ஆனால் இப்படம் பார்த்திபனுக்கு நற்பெயர், விருதுடன் பண லாபத்தையும் சேர்த்தே தரும்.
ஹாலிவுட் ஸ்டைலில் ஒன்றரை மணிநேரத்தில் பலதரப்பட்ட ரசிகர்களையும் கவரக்கூடிய கதைக்களம்தான் இப்படம்.
எனினும் நம் பாமர ரசிகனுக்கும் புரியும் வகையில் நிறுத்தி, நிதானமாக பயணித்த பார்த்திபனுக்கு சிறப்பு பாராட்டுகள்.
ராம்ஜியின் ஒளிப்பதிவு, சத்யாவின் இசை, ரசூல் பூக்குட்டியின் சவுண்ட் டிசைன் என அனைத்துமே படத்துக்கு பிளஸ் தான்.
புத்தகம் படிக்கும் பழக்கம் குறைந்துவரும் இன்றைய சூழலில் இதுபோன்ற படம், மக்களிடம் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதுவே பார்த்திபன் அவர்களுக்கு கிடைத்த வெற்றி.
உலகத்தரத்தில் ஒரு தமிழ் சினிமா. யதார்த்தமும் நம்பகத்தன்மையும் பெற்று இருப்பதே இந்த படத்தின் சிறப்பு. பார்த்திபனின் தரமான 'ஒத்த செருப்பு 7' படம் - ஒட்டு மொத்த தமிழ் சினிமாவின் வெற்றி.

