‘காப்பான்’ படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ள போதிலும் வசூல் ரீதியில் படக்குழுவினருக்கு தெம்பும் உற்சாகமும் கிடைத்துள்ளன.
சில இடங்களில் ரஜினியின் ‘பேட்ட’யை விட ‘காப்பான்’ வசூல் அதிகமாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் சூர்யாவின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் தகவல் பரிமாறிக் கொள்கின்றனர்.
கே.வி. ஆனந்த், சூர்யா கூட்டணியில் மூன்றாவதாக உருவாகி உள்ள இப்படத்தின் தெலுங்குப் பதிப்புக்கும் நல்ல வரவேற்பாம். இதுகுறித்து தனக்கு நெருக்கமானவர்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டுள்ளார் கே.வி. ஆனந்த்.
“முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகுதான் இந்தியாவில் சிறப்புப் பாதுகாப்புப் பிரிவு (எஸ்பிஜி) உருவாக்கப்பட்டது.
“ஹாலிவுட் படைப்புகளில் இந்தப் பிரிவைப் பின்னணியாக வைத்து நிறைய படங்கள் வெளியாகி உள்ளன. தமிழில் யாருமே இத்தகைய கதைக்களத்தைத் தொடவில்லை. இந்நிலையில் நானும் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகரும் இப்படிப்பட்ட ஒரு கதை குறித்து கடந்த 2011ஆம் ஆண்டிலேயே விவாதித்தோம். அதன் பிறகு கதை ஓரளவு வடிவம் பெற்றதும் அடுத்த ஆண்டே அதற்கான உரிமத்தைப் பதிவு செய்தோம்,” என்கிறார் கே.வி. ஆனந்த்.
எனவே ‘காப்பான்’ கதை தன்னுடையது என்று யாரும் உரிமை கோர முடியாது என்பதை அவர் நாசுக்காக சுட்டிக்காட்டுகிறார். பட வேலைகளைத் துவங்கும் முன்னர் உளவுத்துறை, பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளை சந்தித்துப் பேசியுள்ளார். அப்போதுதான் பாகிஸ்தானில் உளவு பார்த்த இந்திய அதிகாரி ஒருவரது அனுபவங்கள் ஆனந்துக்கு தெரியவந்துள்ளன.
“சூர்யா அறிமுகமான ‘நேருக்கு நேர்’ படத்தின் ஒளிப்பதிவாளர் நான்தான். அந்தப் படத்துடன் சினிமாவை விட்டே அவர் ஓடிவிடுவார் என்றுதான் கணித்திருந்தேன். காரணம் அவர் அந்தளவுக்கு அப்பாவியாக இருந்தார். எனினும் அமீர், பாலா, கௌதம் மேனன் உள்ளிட்ட இயக்குநர்களுடன் பணியாற்றிய பின்னர் நிறைய கற்றுக் கொண்டுள்ளார்.
“‘அயன்’ படத்தில் பணியாற்றிய போதே ஒரு நடிகராக அவர் முழுமை அடைந்து விட்டார் என்பதை என்னால் உணர முடிந்தது. அதில் மிக அனாயசமாக நடித்திருந்தார்,” என்கிறார் ஆனந்த்.