சுர்வின்: திரை உலகில் பெண்களை இன்னும் அதிகமாக மதிக்க வேண்டும்

சுர்வின்: திரை உலகில் பெண்களை இன்னும் அதிகமாக மதிக்க வேண்டும்

3 mins read
484cf26b-b057-4651-a256-0acf4cb8f2a9
நடிகை சுர்வின்  சாவ்லா.  -

திரை உலகில் பெண்களை இன்னும் அதிகமாக மதிக்க வேண்டும் என்கிறார் நடிகை சுர்வின் சாவ்லா.

நடிக்க வந்த புதிதில் தமக்கு பல்வேறு வகையிலும் பாலியல் தொல்லைகள் இருந்ததாக அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வட இந்தியாவில் இருந்து கோடம்பாக்கத்துக்கு இறக்குமதியான சுர்வின், வசந்த் இயக்கத்தில் வெளியான 'மூன்று பேர் மூன்று காதல்' படத்தில் நாயகியாக நடித்தவர்.

அந்தப் படம் பெரிய வரவேற்பைப் பெறாவிட்டாலும் அடுத்தடுத்து சில வாய்ப்புகள் இவரைத் தேடி வந்தன. அர்ஜுனுடன் 'ஜெய்ஹிந்த்-2', விமலுடன் 'புதிய திருப்பங்கள்' உள்ளிட்ட படங்களில் நடித்தார். பின்னர் தெலுங்கு, இந்திப் படங்களிலும் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்ததாம்.

இந்நிலையில் வாய்ப்பு கேட்டுச் சென்றபோது சில இயக்குநர்களால் பல்வேறு வகையிலும் பாலியல் தொல்லைகளை எதிர்கொண்டதாகச் சொல்கிறார் சுர்வீன். அந்த வகையில் ஐந்து இயக்குநர்களால் பாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இவர்களில் இருவர் இந்தித் திரையுலகைச் சேர்ந்தவர்கள் எனில், மற்ற மூவரும் தென்னிந்திய திரையுலகில் பிரபலமானவர்களாம்.

"இந்த ஐந்து பேரில் ஒருவர் தேசிய விருது பெற்றவர். அவரது படத்தில் நடிப்பதற்கு கதாநாயகி ஒருவரைத் தேடிக் கொண்டிருப்பதாகக் கேள்விப்பட்டேன். அதற்கான தேர்வில் பங்கேற்கச் சென்றபோது வேண்டுமென்றே ஆபாச வசனங்களைப் பேச வைத்தார். பிறகு சம்பந்தமில்லாமல் சில விஷயங்கள் குறித்துப் பேசினார். அவரது நோக்கம் தெரிய வந்ததும் விலகிச் செல்ல முயன்றேன்.

"எனவே, உடல்நிலை சரியில்லை என்று கூறி மும்பைக்குத் திரும்பி விட்டேன். ஆனால், அவர் என்னை விடுவதாக இல்லை. என்னைப் பின்தொடர்ந்து மும்பைக்கே வந்துவிட்டார். அதன் பிறகும் பொறுத்துக்கொள்ள இயலாமல், அவர் எண்ணம் நிறைவேறாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தேன்.

"ஆனால் அவருக்கு நான் சொன்னது புரியவில்லை. தமிழ் மட்டுமே அறிந்தவர் என்பதால் வேறொரு நபர் மூலம் என்னை அணுகினார். 'படப்பிடிப்பு துவங்கும் வரை ஒத்துழைத்தால் போதும்..அதன் பிறகு நிறுத்திவிடலாம்' என்று அவர் சொன்னதும், கோபத்தின் உச்சிக்குப் போனேன்.

"'நீங்கள் தவறனான கதவைத் தட்டுகிறீர்கள். எனக்குத் திறமை இருப்பதாக உங்கள் இயக்குநர் நினைத்தால் படத்தில் நடிக்கிறேன். இல்லையெனில் விட்டுவிடுங்கள்' என்று கறாராக கூறிவிட்டேன். அந்த இயக்குநர் இன்றுவரை அந்தப் படத்தைத் தொடங்கவே இல்லை," என்று சுர்வின் சாவ்லா தெரிவித்துள்ளார்.

தென்னிந்தியாவைச் சேர்ந்த மற்றொரு இயக்குநர் தன்னிடம் ஆபாசத்தின் உச்சம் என்று சொல்லும் வகையில் மிகக் கேவலமாகப் பேசியதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அப்போது முதல் அந்த இயக்குநரைத் தாம் திரும்பிக் கூட பார்ப்பதில்லை என்று கூறியுள்ளார்.

"உன்னுடைய உடற்கட்டு மிக அழகானது. அதை ஒவ்வொரு அங்குலமாக வர்ணிக்க விரும்புகிறன் என்றெல்லாம் அந்த இயக்குநர் என்னிடம் அசடு வழிந்தார்.

"பிரபலமான இயக்குநர் இந்தளவு அநாகரிகமாக நடந்துகொள்வார் என்று நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. மேலும், ஓர் இளம்பெண்ணிடம் இந்தளவு கேவலமாக நடந்து கொள்வார்களா? என்று வியப்பாகவும் இருந்தது.

"தங்கள் உடன் பிறந்த சகோதரிக்கு இப்படி நடந்தால் அவர்களால் சும்மா இருக்க முடியுமா? இதையெல்லாம் நினைத்தபோது மிகவும் வருத்தமாகவும் சக நடிகைகள் மீது கவலையாகவும் இருந்தது," என்கிறார் சுர்வின் சாவ்லா.

பெண் கலைஞர்களுக்கு திரையுலகில் தற்போது நல்ல வாய்ப்புகள் கிடைப்பதும், அவர்கள் அங்கீகரிக்கப்படுவதும் மகிழ்ச்சி அளிப்பதாகக் குறிப்பிடுபவர், அதே வேளையில் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்கிறார்.

"பாலியல் தொல்லைகளை கடந்த பிறகே இன்றுள்ள நிலையை என்னால் எட்டிப் பிடிக்க முடிந்தது. இதே போன்று மற்றவர்கள் பாதிக்கப்படக் கூடாது என விரும்புகிறேன்," என்கிறார் சுர்வின் சாவ்லா.