வெளியீடு காணும் முன்பே திரையுலகத்தினர் மத்தியில் பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது ‘மிக மிக அவசரம்’ திரைப்படம்.
பெண் போலிசார் எதிர்கொள்ளும் பல்வேறு சிக்கல்களை, சங்கடங்களை இந்தப் படத்தில் விரிவாக அலசி இருப்பதாகச் சொல்கிறார் இயக்குநர் சுரேஷ் காமாட்சி.
படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்த்த அனைவருமே சிறப்பான படைப்பு என்று பாராட்டி உள்ளனர்.
இந்நிலையில் தனக்கு சவாலான கதாபாத்திரம் அமைந்ததாலும், அதன் மூலம் பெண்களுக்கு முக்கியச் செய்தியைச் சொல்லமுடியும் என்பதாலும் இப்படத்தில் நடிக்க மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டதாகச் சொல்கிறார் படத்தின் நாயகி ஸ்ரீ பிரியங்கா.
“சினிமாவில் அறிமுகமாகி பல ஆண்டுகள் கழித்து தான் இதுபோன்ற கதாபாத்திரம் கிடைக்கும். எனக்கு இவ்வளவு சீக்கிரமே இப்படி ஒரு வாய்ப்பு அமைந்தது மகிழ்ச்சி தருகிறது,” என்கிறார் ஸ்ரீ பிரியங்கா.
இப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் தான் நடிக்க வேண்டும் என்று மனதுக்குள் எந்தவித எதிர்பார்ப்புகளையும் வளர்த்துக்கொள்ளவில்லை என்று குறிப்பிடுபவர், போலிஸ் வேடத்துக்காக அதிகம் மெனக்கெடவில்லை என்றும் சொல்கிறார்.
“பள்ளியில் படிக்கும் போது கூட வீட்டுப் பாடம் செய்ய மாட்டேன்.
“இயக்குநர் சுரேஷ் காமாட்சி இந்தப் படத்துக்கான கதையை விவரித்ததும், எனக்கு அளிக்கப்பட்ட சாமந்தி என்ற கதாபாத்திரமாகவே என்னைக் கற்பனை செய்து கொண்டேன்.
“அந்தக் கதாபாத்திரமாகவே நிஜ வாழ்க்கையிலும் நான் இருந்திருந்தால் என்ன செய்திருப்பேனோ, அதைத் தான் ஒவ்வொரு காட்சியிலும் இயல்பாக பிரதிபலித்து இருக்கிறேன்,” என்கிறார் ஸ்ரீ பிரியங்கா.
இவரை நேரில் பார்க்கும் போது ஒரு மாதிரியும், திரையில் பார்க்கும்போது வேறு மாதிரியும் இருப்பதாகப் பலரும் சொல்வார்களாம். அதுவே தனது பலம் என்கிறார்.
அதனால்தான் எந்த படத்தில் நடித்தாலும் அந்த கதாபாத்திரமாகவே எளிதில் மாறிவிட முடிகிறதாம்.
“இதுபோன்று சமுதாயத்துக்கு நல்ல கருத்துக்களை எடுத்துக் கூறும் படைப்புகள் அதிகம் வெளிவர வேண்டும். பெரிய அளவில் வெற்றியும் பெற வேண்டும் என்பதே எனது விருப்பம்.
“இதுபோன்ற படங்களில் நடிப்பது மன நிறைவையும் மகிழ்ச்சியையும் தருகிறது. இத்தகைய கதாபாத் திரங்களில் தொடர்ந்து நடிப்பேன்,” என்கிறார் ஸ்ரீ பிரியங்கா.
இப்படத்தில் அரீஷ்குமார் நாயகனாகவும், சீமான், ‘வழக்கு எண்’ முத்துராமன், ஈ.ராமதாஸ், லிங்கா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
“யதார்த்தமான படைப்பாக இப்படம் உருவாகி இருக்கிறது. எனவே இப்படம் ரசிகர்களுக்குப் பிடிக்கும்,” என்கிறார் இயக்குநர் சுரேஷ் காமாட்சி.