விஜய்யை விமர்சித்து ‘மிருகம்’ பட இயக்குநர் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தக் காணொளியில் நடிப்பதோடு நிறுத்திக்கொள்ளுங்கள், மேடையில் பொய் பேசுவது எல்லாம் இனியும் வேண்டாம் என்று அவர் எச்சரித்துள்ளார்.
‘சிந்து சமவெளி’, ‘உயிர்’, ‘மிருகம்’ படங்களை இயக்கிய சாமி, விஜய்யை விமர்சித்து காணொளி வெளியிட்டுள்ளார்.
அதில், “நானும் நீங்களும் நான்கு முறைதான் சந்தித்துள்ளோம். சினிமாவில் என்ன வேண்டுமானாலும் நடக்கும். அது பிரச்சினை இல்லை. நீங்கள் ரஜினிகாந்த் மாதிரி நடித்துவிட்டு மட்டும் போங்கள். தயவுசெய்து வாய் திறந்து பேசாதீர்கள்.
“நீங்கள் திரைத்துறையைத் தாண்டி எந்தளவில் நல்லவர் என்பது தெரியும். ரசிகர்களைப் பார்த்து, அவர்களிடம் கை கொடுத்துவிட்டு ‘டெட்டால்’ போட்டு கை கழுவுகிறீர்கள். அதை நானே பார்த்தேன்.
“நீங்கள் எந்தவிதத்தில் ரூ.50 கோடி சம்பளம் வாங்குகிறீர்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. 60 நாட்கள் நடிக்கிறீர்கள். அதற்கு கறுப்புப் பணமாக சொத்து வாங்கிக் கொள்கிறீர்கள். இதில் எங்கே நேர்மை, உண்மை உள்ளது? மேடையில் மட்டும் ஏன் பொய்யாகப் பேசுகிறீர்கள்? எவ்வளவு நாள் தமிழகத்தை ஏமாற்றமுடியும்?
“தயவுசெய்து படத்தில் நடிப்பதோடு நிறுத்திக்கொள்ளுங்கள். மேடையில் எல்லாம் கருத்துச் சொல்ல வேண்டாம். நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடித்துவிட்டுப் போகவும். வாயைக்கொடுத்து மாட்டிக்கொள்ளாதீர்கள்.
“ஒருநாள் உண்மை வெளியில் வரும். அப்போது நடிப்பவர்கள் எல்லோரும் கேவலப்பட வேண்டி வரும். தயவுசெய்து உங்கள் குணத்தை மாற்றிக் கொள்ளுங்கள்,” என்று கூறியுள்ளார்.