தனது இளம்பருவ காதல் அனுபவம் குறித்து மனம் திறந்து பேசியுள்ள கங்கனா ரணாவத், “இளம் பருவத்தில் முத்தம் தருவதுகூட எப்படி என எனக்குத் தெரியாது. அதனால் எனது உள்ளங்கையில் முத்தம் கொடுத்து பயிற்சி எடுத்தேன்,” என்று கூறியுள்ளார்.
“எனக்குப் புரியாத வயதில் ஆசிரியர் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. அந்த முதல் காதல் 15 வயதில் வந்தது. 17 வயதில் சண்டிகரில் இருந்தோம். எனது தோழி ஒரு பையனை விரும்பினாள்.
“அவனுடைய நண்பனும் நானும் அவர்களுக்காக காத்திருக்க நேர்ந்தது. அப்போது அந்த நண்பனைக் காதலிப்பதாகச் சொன்னேன். அவனோ என்னைப் பார்த்து ‘நீ ரொம்ப சின்ன பொண்ணு,’ என்று கூறினான்.
“எனக்கு இதயமே வெடித்தது போல் ஆகிவிட்டது. ‘ஒரு வாய்ப்பு கொடு, நான் வளர்ந்தபிறகு வரு கிறேன்,’ என்றேன்.
“அடிக்கடி நண்பனுக்கு கை பேசியில் தகவலும் அனுப்பினேன்.
“அதன்பிறகு நாங்கள் இருவரும் சில நாட்கள் சுற்றிவிட்டுப் பிரிந்து விட்டோம். எனக்கு முத்தம் கொடுப்பது எப்படி என்பதுகூட அப்போது சரியாகத் தெரியவில்லை.
“அப்போது வயது குறைவு என்பதால் காதலில் சரியான புரிதல் இல்லாமல் இருந்தது,” என்று கூறியுள்ள கங்கனா, தனக்கும் ஜெயலலிதாவுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
நாங்கள் இருவருமே ஆணாதிக்க சவாலை எதிர்கொண்ட வர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழில் ‘தாம் தூம்’ படத்தில் ஜெயம் ரவியின் ஜோடியாக நடித்துள்ள கங்கனா ரணாவத், இப்போது மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் ‘தலைவி’ படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
ஏ.எல்.விஜய் இயக்கி வரும் இந்தப் படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசை அமைக்கிறார்.
கோவையில் நடிகை கங்கனா ரணாவத் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தலைவி திரைப்படத்திற்காக தமிழ்மொழியை சரளமாகப் பேச கற்றுவருகிறேன்.
“அரசியலுக்கு வரும் எண்ணம் எல்லாம் எனக்கில்லை. ஆனால் சினிமாவில் மட்டும் அரசியல் சம்பந்தப்பட்ட படங்களில் நடிப்பேன்.
“மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கும் எனக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன.
“16 வயதில் சினிமாவுக்கு வந்தது, ஆணாதிக்கத்தைச் சமாளித்தது இப்படி பல ஒற்றுமைகளைக் கூறிக்கொண்டே செல்லலாம்,” என்றார்.
ஏ.எல்.விஜய் இயக்கும் ‘தலைவி’ படத்தில் இந்தி நடிகை வித்யா பாலன் நடிப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் அவரது தேதிகள் உரிய நேரத்தில் கிடைக்காததால் தற்போது கங்கனா நடிக்கிறார்.
அண்மையில் இவர் ஜான்சி ராணியாக நடித்து இயக்கிய ‘மணிகர்ணிகா’ படம் பெரிய வெற்றிபெற்றது.
திறமைக்கும் சர்ச்சைக்கும் குறைவே இல்லாத கங்கனா நடித்தால் ‘தலைவி’ படம் இந்திய அளவில் பேசப்படும் ஒன்றாய் அமையும் என கூறப்படுகிறது.