இரண்டு படங்களைத் தயாரித்து பெரும் நஷ்டத்திற்குள்ளான சசிகுமார் கடனை அடைக்க 8 படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்து இடைவிடாது தொடர்ந்து நடித்துவருகிறார். ‘சுப்ரமணியபுரம்’ படத்தின் மூலமாக தமிழ்த்திரையில் காலடி எடுத்து வைத்தவர் சசிகுமார். இந்தப் படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து ‘நாடோடிகள்’ படத்தை தயாரித்து நடித்தார்.
அந்தப் படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. சசிகுமாருக்கு ரசிகர் வட்டம் தொடங்கியது. அதையடுத்து இயக்குநர் பாண்டிராஜின் ‘பசங்க’ படத்தை தயாரித்தார். அந்தப் படம் பட்டிதொட்டிகளில் எல்லாம் அரங்கு நிறைந்து நல்ல வசூலை அள்ளியது. அதன்பிறகு ‘சுந்தரபாண்டியன்’ படத்தில் விஜய் சேதுபதிக்கு வில்லன் கதாபாத்திரம் கொடுத்து மக்கள் மனதில் அவரை நிலை
நிறுத்தினார். இப்படி ஒரே நேரத்தில் இயக்கம், நடிப்பு, தயாரிப்பு என பட்டையைக் கிளப்பினார் பன்முகம்கொண்ட சசிகுமார். அவரின் ‘கம்பெனி புரொடக்ஷன்ஸ்’ தமிழ் சினிமாவின் முக்கியமான தயாரிப்பு நிறுவனமாக மாறியது. பின்பு இயக்குநர் பாலு மகேந்திராவின் ‘தலைமுறைகள்’ படத்தைத் தயாரித்தார். ஆனால் அந்தப் படம் அவர் எதிர்பார்த்ததுபோல் ஓடாமல் பெரும் நஷ்டம் ஏற்பட்டது.
அந்த நஷ்டத்தை ஈடுகட்ட பாலாவின் ‘தாரை தப்பட்டை’ படத்தைத் தயாரித்து, அதில் முக்கிய வேடத்திலும் நடித்தார். ஆனால் அந்த படமும் வசூல் ரீதியாக ஏமாற்றத்தையே கொடுத்தது. இந்த இரண்டு படங்களையும் எடுக்க சசிகுமார் வெளியே வாங்கிய தொகை அதிகரிக்கத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் நடிப்பில் கவனம் செலுத்தி பிறகு படங்களை இயக்கி, தயாரித்துக்கொள்ளலாம் என்று அவரின் அபிமானிகள் கூறிய அறிவுரையை ஏற்று தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.
கடன் சுமை அதிகரித்ததால் செய்வதறியாது உறைந்து நின்றார் சசிகுமார். அந்நேரத்தில் அவரின் உறவினரும் ‘கம்பெனி புரொடக்ஷன்ஸ்’ நிர்வாகியுமான அசோக் குமார், அன்புசெழியனிடம் வாங்கிய கடனுக்காக வந்த மிரட்டல் தாளாமல் தற்கொலை செய்துகொண்டார். அடிமேல் அடி வாங்கிய சசிகுமார் மன உளைச்சலுக்கு ஆளானார்.
கடன், வட்டி என்று அவரின் கடன் சுமை ரூ.30 கோடிக்கு மேல் அதிகமானது. அந்தக் கடன் சுமையிலிருந்து மீண்டு வரமுடியாமல் போராடினார் சசிகுமார். இனி படம் தயாரிக்க முடியாது. அதனால் படங்களில் நடித்துத்தான் கடனை அடைக்கமுடியும் என்ற முடிவுக்கு வந்த சசிகுமார் தற்பொழுது 8 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ஒவ்வொரு படத்திற்கும் ரூ. 3.50 கோடி ரூபாய் பேசப்பட்டு இருக்கிறது.
ஒரு படத்தில் வாங்கும் சம்பளத்தில் 3 கோடி கடனை அடைக்கவும் 50 லட்சத்தை தன் செலவுக்காக வைத்துக்கொள்ளவும் திட்டமிட்டுள்ளார்.
தரமான படங்களை இயக்கி, தயாரித்ததோடு சமுத்திரகனி, விஜய் சேதுபதி, இயக்குநர் பாண்டிராஜ் உள்ளிட்டவர்களை வேறு கோணத்தில் மக்கள் மனதில் அறிமுகப்படுத்திய சசிகுமார், யார் உதவியையும் நாடாமல் சினிமாவில் விட்டதைப் பிடிக்க தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்.
கடனை அடைத்துவிட்டு, அதிலிருந்து முற்றிலுமாக மீண்டுவரும் முயற்சியில் போராடிக்கொண்டிருக்கிறார் சசிகுமார்.