காற்று மாசு குறித்து நடிகை பிரியங்கா சோப்ரா கருத்து தெரிவிக்கப் போக, சமூக வலைத்தளங்களில் பலரும் அவரை வறுத்தெடுத்துவிட்டனர்.
புதுடெல்லியில் கடந்த சில தினங்களாக காற்று மாசு மோசமடைந்து வருகிறது. லட்சக்கணக்கானோர் இதனால் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லியில் முகமூடி அணிந்துகொண்டு செல்ஃபி படம் எடுத்துள்ளார் பிரியங்கா.
பின்னர் அதை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு, "படப்பிடிப்பு நடத்துவது கடினமாக உள்ளது. இதுபோன்ற நிலையில் இங்கு எப்படி வாழ்வது? இதுகுறித்து நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை," என்று குறிப்பிட்டிருந்தார் பிரியங்கா.
ஆனால் அவர் எதிர்பார்த்ததற்கு நேர்மாறாக இணையவாசிகள் அவர் மீது பாய்ந்து விட்டனர். "காற்று மாசு குறித்து இரட்டை நிலைப்பாடு கொண்ட உங்களைப் போன்றவர்கள் வாய் திறக்கவே கூடாது," என்றும் "காற்று மாசு குறித்துப் பேசுவதற்கு முன்னர் புகை பிடிப்பதை நிறுத்துங்கள்," என்றும் பலர் அவரது பதிவிற்கு பின்னூட்டம் இட்டுள்ளனர்.
அண்மையில் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார் பிரியங்கா. அப்போது தனது குடும்பத்தாருடன் உட்கார்ந்து அவர் புகைபிடிக்கின்ற காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியானது.
இதைக் குறிப்பிட்டே அவருக்கு இணையவாசிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

