'பட்டாம்பூச்சிகள் பறக்கும்'

'பட்டாம்பூச்சிகள் பறக்கும்'

3 mins read
0c8d7a0b-b6bd-4579-aaf8-f5a800033f39
நடிக்கத் துவங்கி 12 ஆண்டுகளாகின்றன. இருப்பினும் இப்போதுதான் மனநிறைவு தரும் கதாபாத்திரங்கள் அமைவதாகச் சொல்கிறார் அதிதி ராவ்.  -

அதிதி ராவ் தமிழில் நடிக்கத் துவங்கி 12 ஆண்டுகளாகின்றன. இருப்பினும் இப்போதுதான் மனநிறைவு தரும் கதாபாத்திரங்கள் அமைவதாகச் சொல்கிறார்.

2007ஆம் ஆண்டு தமிழில் 'சிருங்காரம் படம் மூலம் அறிமுகமானவர் அதிதி. இதையடுத்து 2017ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் 'காற்று வெளியிடை' படத்தில் நடித்தார். தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என மும்மொழிகளிலும் பரபரப்பான நடிகையாக வலம் வருகிறார்.

"எந்த விஷயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் செயல்படுவேன். அதேசமயம் பணியில் புயல் வேகம் காட்டவேண்டும் என்பதுதான் என் கொள்கை. அதனால்தான் பெரிய இயக்குநர்களின் படங்களில் தொடர்ந்து நடிக்க முடிகிறது," என்கிறார் அதிதி.

தற்போது இவர் நடிப்பில் தெலுங்கில் 'வி', இந்தியில் 'த கிரி ஆன் த ட்ரெயின்' மலையாளம், தமிழில் 'துக்ளக் தர்பார்', தனுஷ் இயக்கும் புதுப் படம் என அதிதி நடிப்பில் வரிசையாக பல படங்கள் உருவாக உள்ளன.

மிஷ்கின் இயக்கத்தில் இவர் நடித்துள்ள 'சைகோ' விரைவில் வெளியாகிறது.

"மணிரத்னம், மிஷ்கின் போன்ற பெரிய இயக்குநர்களின் படங்களில் நடிப்பது மிகப்பெரிய விஷயம். சிறு வயது முதலே மணிரத்னத்தின் தீவிர ரசிகை நான். வளர்ந்த பிறகு அவர் படத்திலேயே நாயகியாக நடித்தபோது கனவு போன்று இருந்தது.

"'சைகோ'வில் உதயநிதி ஸ்டாலின், நித்தியா மேனன் ஆகியோரும் உள்ளனர். கதைப்படி தாஹினி என்ற வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளராக நடிக்கிறேன்.

"இந்தக் கதாபாத்திரம் குறித்து நான் பேசுவதைவிட இயக்குநர் மிஷ்கின் விவரிப்பதுதான் சரியாக இருக்கும். அவரும் மணி சாரும் மிகத் தரமான இயக்குநர்கள். அவர்களிடம் பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும்.

"இருவரும் அதிகம் பேசமாட்டார்கள். ஆனால் படப்பிடிப்புத் தளத்தில் அவர்களிடம் கவனிக்க வேண்டிய, கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் கொட்டிக் கிடக்கும்," என்கிறார் அதிதி.

ஒரு படத்தின் கதை என்பது இவருக்கு இரண்டாம் பட்சம்தானாம். முதலில் இயக்குநர் யார்? என்பதே தனது முதல் கேள்வியாக இருக்கும் என்கிறார்.

"எப்படிப்பட்ட கதையாக இருந்தாலும் அதைக் கையாள நல்ல இயக்குநர் தேவை. எனவே இயக்குநர், கதை நாயகிக்கான கதாபாத்திரம் என்ற வரிசையில்தான் ஒரு படத்தில் நடிப்பது குறித்துத் தீர்மானிப்பேன்.

"பல படங்களில் நடித்து முடித்திருந்தாலும் இன்னமும் கூட ஒரு கதையைக் கேட்கும்போது என் வயிற்றுக்குள் பட்டாம்பூச்சிகள் பறப்பது போல் உணர்வேன். ஒரு கதைக்குள் என்னை நான் பொருத்திக்கொண்ட பிறகு அவ்வளவு எளிதில் அதிலிருந்து வெளியேற மாட்டேன். என்னை மனதில் வைத்து எழுதப்பட்ட கதாபாத்திரத்தில் எப்படி நடிக்கப் போகிறேன் என்பதுதான் எனக்கான முதல் சவாலாக இருக்கும்," என்கிறார் அதிதி.

நடனத்தில் கைதேர்ந்த அதிதி அக்கலையைக் கற்றுத்தந்த குருநாதர்களை வாழ்நாள் முழுவதும் மறக்க இயலாது என்கிறார். அதேபோல் திரைப்பட இயக்குநர்களையும் குருவாகவே மதிப்பதாகச் சொல்கிறார்.

பெரிய இயக்குநர்களின் படங்களில் அடுத்தடுத்து நடிக்கும் வாய்ப்பு கிடைப்பது அரிது என்று சொல்பவர் ஐஸ்வர்யா ராய்க்குப் பிறகு மணிரத்னம் இயக்கத்தில் 'காற்று வெளியிடை', 'செக்கச் சிவந்த வானம்' என்று அடுத்தடுத்து இரு படங்களில் நடித்தது தாம் மட்டுமே எனச் சுட்டிக் காட்டுகிறார்.

இதேபோல் தேசிய விருது பெற்ற தெலுங்கு இயக்குநர் மோகனகிருஷ்ணா இந்திரா காந்தி இயக்கத்திலும் இரு படங்களில் அடுத்தடுத்து நடித்துள்ளார் அதிதி.

"திரைப்பட இயக்குநர்களும் பல விஷயங்களைக் கற்றுத் தரும் குருநாதர்கள்தான். நம் திறமை மீது நம்பிக்கை இருப்பதால்தான் தொடர் வாய்ப்புகளைத் தருகின்றனர். அந்த நம்பிக்கையைக் காப்பாற்றிக் கொள்வது பெரிய விஷயம்.

"பல்வேறு மொழிகளில் வித்தியாசமான படைப்புகளைத் தரும் இயக்குநர்களுடன் பணியாற்றுவது அலாதியான அனுபவம். நான் இயக்குநர்களின் நடிகையாகவே இருக்க விரும்புகிறேன். இயக்குநரின் மனதில் உள்ளதைத் திரையில் கொண்டு வருவதுதான் நடிகர்களின் பணி. அதைச் சிறப்பாகச் செய்தால் நிச்சயம் பெயரெடுக்கலாம்.

"என்னைப் பொறுத்தவரை இந்தப் பணியை ஒழுங்காகச் செய்து வருகிறேன் என்ற மனநிறைவு உள்ளது. மணிரத்னம், மிஷ்கின் போன்ற இயக்குநர்கள் எத்தனை படங்களில் நடிக்க அழைத்தாலும் அலுக்காமல் நடிப்பேன். ஏனெனில் எல்லோருக்கும் இத்தகைய வாய்ப்பு கிடைக்காது," என்கிறார் அதிதி ராவ்.

கொசுறு: படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் பல மொழிகளில் வெற்றி பெற்ற திரைப்படங்களைப் பார்ப்பது தான் அதிதியின் பொழுதுபோக்காம்.