நடிகர் ஜெய்யின் செயல்பாட்டால் திரைப்படம் தயாரிக்கும் எண்ணமே தன் மனதை விட்டுப் போய்விட்டது என்கிறார் தயாரிப்பாளர் நந்தகுமார்.
இவர் ஜெய், அஞ்சலி ஜோடி சேர்ந்து நடித்த ‘பலூன்’ படத்தைத் தயாரித்தவர். கோடம்பாக்கத்தில் இவரை ‘போஸ்டர் நந்தகுமார்’ என்றுதான் குறிப்பிடுகிறார்கள். காரணம், சென்னை மாநகர் முழுவதும் திரைப்படங்களுக்கான விளம்பரச் சுவரொட்டிகளை ஒட்டுவதில் இவரது நிறுவனம்தான் முன்னணியில் உள்ளது.
இதையடுத்து ‘பலூன்’ மூலம் படத்தயாரிப்பிலும் ஈடுபட்டார். இந்நிலையில் தயாரிப்பாளரின் பணத்தை வீணடிப்பதில் ஜெய் போல் ஒரு நடிகரை நான் பார்த்ததே இல்லை எனப் புகார் வாசிக்கிறார் நந்தகுமார்.
“தினமும் நடந்த படப்பிடிப்பில் நூறு பேருக்கும் மேல் வேலை பார்த்தனர். ஒருநாள் காட்சியை விவரிக்கும்போது தெரியாத்தனமாக அஞ்சலி என்று பெயர் சொல்லிக் கூப்பிட்டுவிட்டார் இயக்குநர் சினிஷ். ஜெய்க்கு உடனே கோபம் வந்துவிட்டது.
“‘அதெப்படி பெயரைச் சொல்லிக் கூப்பிடலாம். மேடம் என்றுதானே கூப்பிட வேண்டும்’ என்று சத்தம் போட்டார். மறுதினமே யாரிடமும் விவரம் சொல்லாமல் ஜெய்யும் அஞ்சலியும் கொடைக்கானலில் இருந்து சென்னைக்குப் போய்விட்டனர்.
“இப்படித்தான் பல விளம்பர நிகழ்வுகளிலும் பங்கேற்க முடியாது என ஜெய் அடம்பிடித்தார். அந்தப் படத்தின் மூலம் எனக்குப் பெரிய நஷ்டம் ஏற்பட்டது. இனிமேல் சினிமா தயாரிக்கவே கூடாது என்று விரக்தி அடையும் நிலைக்குக் கொண்டு சென்றுவிட்டார் ஜெய்,” என்கிறார் நந்தகுமார்.