அமில வீச்சால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு ஒப்பனை செய்து, அழகு மற்றும் சிகை அலங்காரம் தொடர்பான கருத்தரங்கிலும் பங்கேற்க வைக்கும் நல்ல காரியத்தைச் செய்துள்ளார் நடிகை சந்தோஷி.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய நடிகை நமீதா பெண்கள் வாழப் பிறந்தவர்கள் என்றும் பெண் குழந்தை பிறந்தால் மரம் நடவேண்டும் என்றும் தெரிவித்தார்.
சினிமாவை விட்டு விலகிய பிறகு ஆடை வடிவமைப்பு, சிகை அலங்காரம் ஆகியவற்றில் கவனம் செலுத்திவரும் நடிகை சந்தோஷி சொந்த நிறுவனமும் நடத்தி வருகிறார். இந்நிலையில் ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் குறித்த மாபெரும் கருத்தரங்கு ஒன்றை அவர் சென்னையில் முறையில் நடத்தினார்.
இதில் தொலைக்காட்சி புகழ் ரக்ஷிதா தினேஷ், பிரியங்கா ஆகியோருடன் மாடல் அழகிகள் சிலரும் கலந்துகொண்டனர். மேலும் அமில வீச்சுப் பாதிப்புக்கு ஆளான டெல்லியைச் சேர்ந்த லட்சுமி அகர்வாலும் பங்கேற்று ‘ஃபேஷன் வாக்’ நிகழ்வில் நடந்து கைத்தட்டலைப் பெற்றார்.
இந்த நிகழ்வில் பேசிய நமீதா, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிப்லாந்திரி என்ற குக்கிராமத்தில் பெண் குழந்தை பிறந்தால் அதைக் கொண்டாடும் விதமாக 111 மரக்கன்றுகளை நட்டு வைத்து வளர்ப்பதாகக் குறிப்பிட்டார்.
“15 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்த இந்த முயற்சி இயற்கையைப் பாதுகாக்கும் என்பதுடன் ஒட்டுமொத்த கிராமத்தின் பொருளாதாரத்தையும் மேம்படுத்த உதவுகிறது. அந்த வகையில் அக்கிரமத்தில் பிறக்கும் ஒவ்வொரு பெண்ணும் மிகப்பெரிய அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் வகையில் பிறக்கிறாள்.
“என்னைப் பொறுத்தவரை பெண்கள் பாதிக்கப்படப் பிறந்தவர்கள் அல்ல. சாதிக்கப் பிறந்தவர்கள். வீராங்கனைகள். இதை அனைவரும் ஒப்புக்கொள்வீர்கள் என நம்புகிறேன்,” என்றார் நமீதா.
இதற்கு முன்பு முக்கியப் பிரமுகர்கள் அமர்ந்திருக்கும் மேடையில் தமக்கும் பலமுறை இடம் கிடைத்திருக்கிறது என்று குறிப்பிட்ட அவர், அப்போதெல்லாம் இல்லாத அளவுக்கு தற்போது பெருமையாக உள்ளது எனத் தெரிவித்தார். முன்னதாக பேசிய லட்சுமி அகர்வால், கடந்த 2005ஆம் ஆண்டு தாம் அமிலவீச்சுக்கு ஆளானதாகக் குறிப்பிட்டார். பெண்ணாகப் பிறந்து வாழ்வதுதான் இன்றைய சமூகத்தில் சவாலான ஒன்று என்றார் அவர்.
“அதிலும் அமில வீச்சுப் போன்ற தாக்குதலை எதிர்கொண்டு வாழ்வது மிகக் கடினமான ஒன்று.
கடந்த 2009ஆம் ஆண்டு வரை முகத்தை மறைத்தபடிதான் எங்கும் சென்று வந்தேன். அப்போதுதான் நான் ஒன்றும் குற்றவாளி அல்ல என்ற எண்ணமும் தெளிவும் ஏற்பட்டன.
“யாருக்கெல்லாம் என்னைப் பார்த்தால் அசிங்கமாக அருவருப்பாகத் தோன்றுகிறதோ அப்படிப்பட்டவர்கள் முதலில் தங்களைத் தாமே பார்த்து அசிங்கப்பட வேண்டும் என முடிவெடுத்தேன்.
“நான் அமிலவீச்சு தாக்குத
லுக்கு ஆளானது ஒருமுறைதான்.
“ஆனால் இந்தச் சமூகத்தில் அதைச் சுட்டிக்காட்டியே பலமுறை தாக்குதலுக்கு ஆளாகியுள்ளேன்.
“அனைத்தையும் கடந்து இன்று தைரிய மான, தன்னம்பிக்கை நிறைந்த பெண்ணாக உருவெடுத்துள்ளேன்,” என்றார் லட்சுமி அகர்வால்.