‘அதுல்யா என்றால் அழகு, அழகு என்றால் அதுல்யா’ என்று கவிதை எழுதி வருகின்றனர் அவரின் இணைய ரசிகர்கள். இன்ஸ்டகிராமில் 13 லட்சம் பார்வையாளர்களும் டுவிட்டரில் சுமார் இரண்டரை லட்சம் பேரும் இவரைப் பின்தொடர்ந்து வருகின்றனர்.
‘காதல் கண்கட்டுதே’ படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் அதுல்யா. அந்தப் படத்தில் அவரது யதார்த்தமான நடிப்பாலும் துருதுரு பார்வையாலும் இவர் பிரபலமானார்.
இன்றைய சினிமா உலகில் புகழ்பெற வேண்டும் எனில் இணையத்தில் பிரபலமடைய வேண்டும். அதே போல சமூகவலைத்தளங்களில் அதிக ரசிகர்களின் ஆதரவு இருப்பவர்களுக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு எளிதில் கிடைத்து வருகிறது.
சமூக வலைத்தளங்கள் மூலம் லட்சக்கணக்கான பார்வையாளர்களைக் கொண்டுள்ள அதுல்யாவிற்கு பெரும் பயன் கிடைத்துள்ளது. தொடர் தோல்விகளால் துவண்டு போன அதுல்யாவை மீட்டு எடுத்தது அவரின் இணைய ரசிகர்கள்தானாம்.
எப்போதும் சமூகவலைத்தளங்களில் துடிப்பாக இருந்து வரும் அதுல்யா புகைப்படங்களையும் பதிவேற்றி உள்ளார். அவர் கடற்கரையில் மணல் வீடு கட்டி விளையாடுவது போன்ற படத்தைப் பார்த்து சொக்கிப்போன ரசிகர்கள் பலரும் ‘லைக்கு’களை அள்ளித் தெளித்து வருகின்றனர். அதிலும் சில ரசிகர்கள், “காந்த கண் அழகி, அழகி என்றால் அதுல்யா, அதுல்யா என்றால் அழகி,” என்று கவிதைகள் எழுதி அவரைப் புகழ்ந்துள்ளனர்.
அதுல்யா நடித்த ‘அடுத்த சாட்டை’ படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. அடுத்ததாக ஜெய் மற்றும் வைபவுடன் இணைந்து நடித்திருக்கும் ‘கேப்மாரி’, ‘நாடோடிகள் 2’, ‘வட்டம்’ என்று வரிசையாக பல படங்கள் இவரது கைவசம் உள்ளன.